மீண்டும் மீண்டும்! பழவேற்காடு ஏரியில் மணல் திட்டுகள் அதிகரிப்பு:56 மீனவ கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு
பழவேற்காடு:பழவேற்காடு ஏரியில் மணல் திட்டுகள் மீண்டும் மீண்டும் அதிகரித்து வருவதால், படகு போக்குவரத்து மற்றும் மீன்வளம் பாதித்து வருகிறது. அதனால், பழவேற்காடு பகுதியைச் சுற்றியுள்ள, 56 மீனவ கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே, ஏரியை படிப்படியாக துார் வாரி சீரமைப்பதற்கான திட்டமிடல்களை தொடங்க வேண்டும் என, மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு ஏரியானது, தமிழக - ஆந்திர மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளது. இது, ஒடிஷா மாநிலத்தில் உள்ள, 'சில்கா' ஏரிக்கு அடுத்தபடியாக, நாட்டின் இரண்டாவது பெரிய உவர்ப்பு நீர் ஏரியாகும்.
ஸ்வர்ணமுகி, காலங்கி, ஆரணி ஆறுகள் மற்றும் பகிம்ஹாம் கால்வாய் ஆகியவற்றின் வாயிலாக, ஒவ்வொரு ஆண்டு மழையின் போதும், 20 - 25 டி.எம்.சி., மழைநீர், பழவேற்காடு ஏரி வழியாக வங்காள விரிகுடா கடலுக்கு செல்கிறது.


