பேசாப் பொருளைப் பேசத் துணிந்தவர் பாரதி: தினமணி ஆசிரியர்
பேசாப் பொருளை துணிந்து பேசியவர் மகாகவி பாரதி என தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் தெரிவித்தார்.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வளாகத்தில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்குரைஞர்கள் சங்கத்தின் (எம்.எம்.பி.ஏ.) தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற மகாகவி பாரதியார் நினைவுச் சொற்பொழிவு நிகழ்ச்சியில், 'பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்' என்ற தலைப்பில் தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் பேசியதாவது: மகாகவி பாரதியாரின் வாழ்க்கையில் வழக்குரைஞர்கள் பெரும் பங்காற்றியுள்ளனர். மதுரை சேதுபதி பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றிய பாரதியை சென்னைக்கு அனுப்பிய பெருமை வழக்குரைஞரான கோபாலகிருஷ்ண ஐயரைச் சாரும்.
அதேபோல, பாரதியார் கடலூர் சிறையிலிருந்து மீண்டு வர முயற்சி எடுத்தவர்கள் வழக்குரைஞர்களே. அவர்களில் மிக முக்கியமானவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் முதலாவது இந்திய தலைமை நீதிபதியாக (பொறுப்பு) இருந்த மகான் மணி ஐயர் என்கிற சுப்பிரமணிய ஐயர்.



