கிராம ஊராட்சி செயலர்களுக்கும் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் தமிழக அரசுக்கு சங்கங்கள் வலியுறுத்தல்
சிவகங்கை: ''கிராம ஊராட்சி செயலர்களையும் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்க முதல்வர் விஜய் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட வேண்டும்,'' என, சிவகங்கையில் தமிழ்நாடு கிராம ஊராட்சி செயலர்கள் சங்க மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் வலியுறுத்தினார்.
தமிழகத்தில் உள்ள 12,488 கிராம ஊராட்சிகளில் 2018 முதல் ரூ.15,900 முதல்- 50,400 சம்பளத்தில் கிராம ஊராட்சி செயலர்கள் பணியாற்றி வருகின்றனர். அக்கால கட்டம் முதல் இன்று வரை இவர்களுக்கு பகுதி நேர ஊழியர்களுக்கான ஓய்வூதியம் ரூ.2 ஆயிரம் மற்றும் ஒட்டு மொத்த தொகை ரூ.ஒரு லட்சம் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இவர்கள் முழு நேர பணியாளர்களாக உள்ளனர்.
அரசு பணியாளர்களுக்கான அனைத்து நன்னடத்தை விதிகளும் கிராம ஊராட்சி செயலர்களுக்கும் பொருந்துகிறது. அரசு பணியாளர்களுக்கு உரிய அடிப்படை ஓய்வூதிய விதிகள் பொருந்தவில்லை. இது முரணாக உள்ளது. எனவே கிராம ஊராட்சி செயலர்களை அரசின் உறுதியளிக்கப்பட்ட பென்ஷன் திட்டத்தில் இணைத்து, அதற்கான அரசாணையை வெளியிட வேண்டும்.

