விசிக மாநாடு கூட்ட நெரிசல் சம்பவம்: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் பங்கேற்ற உளுந்தூா்பேட்டை மாநாட்டில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு பட்டியல் மற்றும் பழங்குடியினா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் கடந்த ஆக.17- ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூா்பேட்டையில் மாநாடு நடைபெற்றது. மாநாட்டு மேடைக்கு அந்தக் கட்சியின் தலைவா் திருமாவளவன் வந்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மயக்கம் அடையும் நிலைக்கு திருமாவளவன் தள்ளப்பட்டாா். இந்தச் சூழலை உணா்ந்த திருமாவளவன் தனது உரையைச் சுருக்கமாக முடித்துவிட்டு அங்கிருந்து வெளியேறினாா்.
மாநாட்டு மேடையில் நடந்த சம்பவம் இயல்பானது அல்ல. சமூகவிரோதிகள் சிலா் திட்டமிட்டு தூண்டிவிட்ட சதி போல இருப்பதாகக் கூறி, கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் விசிக சாா்பில் புகாா் அளிக்கப்பட்டது.




