’நாங்கள் செய்ததை அவர் செய்ததாக ஸ்டிக்கர் ஒட்டுகிறார்’– கனிமொழி எம்எல்ஏ மீது எஸ்டிபிஐ குற்றச்சாட்டு
"இது முழுக்க முழுக்க எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகளின் சொந்த முயற்சியால் சாத்தியமானது. ஆனால், கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ தான் நேரில் நின்று காப்பகத்தில் சேர்த்ததாக ஊடகங்களில் பொய்யான தகவல்களைப் பரப்பி உள்ளனர்" - எஸ்டிபிஐ
கோவை துடியலூர் அருகேயுள்ள அசோகபுரம் என்.ஜி.ஜி.ஓ காலனி பகுதியில் கடந்த வாரம் நள்ளிரவில் போதையில் இருந்த இளைஞர் ஒருவர் தனியாக சாலையில் அமர்ந்திருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்தார். அப்போது அருகில் இருந்த நாய் அந்த இளைஞரை விரட்டியடித்து அப்பெண்ணை காப்பாற்றியது. இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியான நிலையில், 17 வயது சிறுவனை துடியலூர் காவல் துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து அறிந்த கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் அப்பெண்ணின் உறவினர்களை கண்டுபிடித்து அவர்களிடம் ஒப்படைக்கும் முயற்சி மேற்கொண்டபோது, அப்பெண்ணின் தம்பியும் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதால் பராமரிக்க முடியாமல் அவரது தாய் சிரமப்பட்டுக் கொண்டிருப்பதால் த.வெ.க நிர்வாகிகள் உதவியுடன் காரமடையில் உள்ள ஒரு மனநல காப்பகத்தில் சேர்த்ததாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் அப்பெண்ணை மனநல காப்பகத்தில் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் சேர்த்ததாக பொய்யான தகவலை பரப்பி விளம்பரம் தேடிக் கொள்வதாக எஸ்.டி.பி.ஐ கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். "மனநலம் பாதித்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்த நபர் குறித்து காவல் துறையில் புகார் அளித்து சட்ட நடவடிக்கையும் எடுக்க வைத்தோம். அப்பெண்ணிற்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவியதால், அவரது குடும்பத்தினரின் சம்மதத்துடன் காப்பகத்தில் சேர்க்கத் திட்டமிட்டோம். ஏற்கனவே மேட்டுப்பாளையத்தில் உள்ள காப்பகத்தில் அப்பெண்ணின் சகோதரி தங்கி இருந்ததால், அங்கேயே இவரையும் சேர்க்க விரும்பி கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷிடம் பரிந்துரைக் கடிதம் பெற்றோம். ஆனால், அந்தப் பரிந்துரைக் கடிதத்துடன் மேட்டுப்பாளையம் காப்பகத்திற்குச் சென்ற போது, 'பிறவியிலேயே மனநலம் பாதிக்கப்பட்டவர்களைச் சேர்க்க முடியாது' எனக் கூறி 4 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகும் கடிதத்தை நிராகரித்து விட்டனர்.


