தாராபுரம் ரோட்டில் இணைப்புச்சாலை பணி இழுபறி ; விபத்துகள் அதிகரிப்பு
உடுமலை: உடுமலையிலிருந்து, தாராபுரம் செல்லும் ரோடு மற்றும் நான்கு வழிச்சாலை இணையும் பகுதியில் பணிகள் இழுபறியாகி வருவதால், விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
பொள்ளாச்சி – திண்டுக்கல் நான்கு வழிச்சாலை பயன்பாட்டிற்கு வந்துள்ள நிலையில், இந்த ரோட்டில் வரும் வாகனங்கள் உடுமலை நகருக்கு வரும் வகையில். இரு புறமும் சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், பாலப்பம்பட்டியிலிருந்து, வரும் நான்கு வழிச்சாலையை இணைக்கும் வகையில் அமைந்துள்ள புறவழிச்சாலையும் தாராபுரம் ரோட்டில் இணைகிறது.
நான்கு வழிச்சாலையில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில், தாராபுரம் ரோட்டை இணைக்கும் பகுதியில், இணைப்பு ரோடுகள் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ரோடுகள் இணையும் பகுதியில் சுற்றுச்சாலை அமைக்கும் பணியும் இழுபறியாகி வருவதால், இப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
மேலும், இங்குள்ள பாலம் பகுதி மற்றும் ரோடுகளில் மின் விளக்கு வசதிகள் செய்யப்படாததால், கடும் பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே, தாராபுரம் ரோடு, நான்கு வழிச்சாலை இணையும் பகுதியில் பணிகளை விரைந்து முடிக்கவும், பாலத்தின் கீழ் பகுதி மற்றும் ரோடுகளில் மின் விளக்கு வசதிகள் ஏற்படுத்தவும், தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.