Politics
குப்பைகளுக்கு இடையே அண்ணாதுரையின் பழைய சிலை: பொதுமக்கள் கடும் அதிருப்தி
கள்ளக்குறிச்சி: கடந்த தி.மு.க., ஆட்சியில் மந்தைவெளியில் இருந்த அண்ணாதுரையின் பழைய சிலையை மாற்றியமைத்து புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து பழைய சிலை அகற்றப்பட்டு, அவ்விடத்தில் புதிய பீடம் அமைத்து நின்ற வடிவிலான அண்ணாதுரையின் புதிய சிலை நிறுவப்பட்டுள்ளது.
ஆனால், இதுவரை புதிய சிலை திறப்பு விழா காணப்படாமல் இருப்பதால், துணிகள் கொண்டு மூடிய நிலையிலேயே உள்ளன. இதற்கிடையே அங்கிருந்து அகற்றப்பட்ட அண்ணாதுரையின் பழைய சிலை அருகில் உள்ள மரத்தடியில் மண்மேடு பகுதியில் வைக்கப்பட்டது.
அப்பகுதியில் பொதுமக்கள் பலர் குப்பைகள் கொட்டி வருவதால், குப்பைகளுக்கு இடையே பழைய சிலை காணப்படுகிறது. மந்தைவெளி வழியாக நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சென்று வரும் நிலையில் குப்பைகளுக்கு இடையே உள்ள அண்ணாதுரை சிலையை காணும் பொதுமக்களை கடும் அதிருப்தியடைய செய்துள்ளது. மேலும் கடந்த 15 ம் தேதி அண்ணாதுரை பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது. பழைய சிலை என்றாலும், அவற்றை முறையாக அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.