வைரங்களால் உருவான விநாயகர்; இதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

கர்நாடக மாநிலம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையையொட்டி மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பந்தல் அமைத்து விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பெங்களூரில் மிகவும் விலையுயர்ந்த விநாயகர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது மக்களிடையே மிகுந்த கவனம் பெற்றுள்ளது.
பெங்களூர் மல்லேசுவரம் மில்க் காலனி பகுதியில் ’ஸ்வஸ்கிதா யுவகர சங்கம்’ சார்பில் இந்த விநாயகர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலை முழுவதும் விலைமதிப்பற்ற அமெரிக்க வைரங்கள், முத்துக்கள், நவரத்தினங்கள் மற்றும் பவளங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ள இந்த சிலையின் மொத்த மதிப்பு ரூ.14 லட்சம் ஆகும்.
மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள சோலாப்பூரை சேர்ந்த திறமையான கைவினை கலைஞர்கள் 3 மாதங்களாகக் கடினமாக உழைத்து இந்த சிலையை உருவாக்கியிருக்கிறார்கள்.
5 அடி உயரமும் 700 கிலோ எடையும் கொண்ட இந்த பிரமாண்ட விநாயகரை அப்பகுதியைச் சுற்றியுள்ள அனைத்து பொதுமக்களும் ஆச்சரியத்துடன் வந்து கண்டுகளித்துச் செல்கின்றனர். அமெரிக்க வைரம் என்பது இயற்கையான வைரம் அல்ல. மாறாக அது செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒருவகையான சிர்கோனியா கல் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)