நெடுஞ்சாலைத்துறையில் பலருக்கு வழங்கப்படாத ஆகஸ்ட் சம்பளம்
விருதுநகர்: தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறையில் பொறியாளர்கள், அலுவலர்களுக்கு ஆகஸ்ட் சம்பளம் நேற்று(செப்., 15) வரை வழங்கப்படவில்லை. சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
நெடுஞ்சாலைத்துறையில் தொடர்ச்சியாக பொறியாளர்களும், மற்ற அலுவலர்களும் பல்வேறு இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
2026 மார்ச் 13 ல் வெளியான அரசாணையின்படி ஜூன் 15 முதல் துறையில் மறு சீரமைப்பு அமல்படுத்தப்பட்டது.இதற்கு உரிய நிதி, புதிய அலுவலகம், பணியாளர்கள் நிரவல், தேவையான பணியிடம் இன்று வரை உருவாக்கப்படவில்லை.
நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர் சென்னை அலுவலகத்தில் இதற்கு உரிய பணிகள் மிகவும் மந்தமாக நடந்து வருகிறது.
இதனால் 2026 ஆக., சம்பளம் நேற்று வரை துறையில் பணிபுரியும் பல பொறியாளர்கள், அலுவலர்களுக்கு வழங்கப்படவில்லை.
அரசு செயலாளர் கவனத்திற்கு கொண்டு சென்றும் தீர்வு ஏற்படவில்லை.
நெடுஞ்சாலைத்துறை அமைச்சர், துறை நிர்வாகத்தில் முழு கவனம் செலுத்த வேண்டும்.
இந்நிலை தொடர்ந்தால் பொறியாளர்களும், மற்ற அலுவலர்களும் போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர வேறு வழியில்லை என்றும், உடனடியாக ஆக., 2026 சம்பளத்தை வழங்க வேண்டும் என்றும் நெடுஞ்சாலைத்துறை பட்டயப்பொறியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் மாரிமுத்து வலியுறுத்தியுள்ளார்.