தனியார் கம்பெனியில் பணிபுரிந்த தொழிலாளியின் விரல்கள் துண்டிப்பு
புதுச்சேரி: சேதராப்பட்டு தனியார் கம்பெனியில் பணியின்போது, விபத்தில் சிக்கிய தொழிலாளியின் கை விரல்கள் துண்டானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார், காந்தி நகரைச் சேர்ந்தவர் கார்த்திக் நாராயணன், 27. இவர் புதுச்சேரி, சேதராப்பட்டில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். கடந்த ஜூன் 28ம் தேதி பணியில் ஈடுபட்ட கார்த்திக் நாராயணன், இயந்திரத்தில் காகிதத்தை வெட்ட முயன்றபோது எதிர்பாராதவிதமாக அவரது வலது கையின் மூன்று விரல்கள் சிக்கி துண்டானது.
அவர், சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இதற்கிடையே, விபத்து குறித்து போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரை வாபஸ் பெறுமாறு, கம்பெனி உரிமையாளர் கமலஹாசன் பேசியுள்ளார். அப்போது, கார்த்திக் நாராயணனுக்கு 6 மாத காலத்திற்குச் சம்பளத்துடன் கூடிய மருத்துவ விடுப்பு மற்றும் ரூ. 50 ஆயிரம் நிதியுதவி அளிப்பதாக உறுதி அளித்துள்ளார்.
அதனை நம்பி கார்த்திக் நாராயணன், புகாரை வாபஸ் பெற்றார். ஆனால், அவர் கூறியபடி, கம்பெனி சார்பாக எந்த உதவியும் செய்யாததால், கார்த்திக் நாராயணன் நேற்று முன்தினம் மீண்டும் சேதராப்பட்டு போலீஸ் ஸ்டேஷனில் விபத்து குறித்து புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் கம்பெனி உரிமையாளர் கமலஹாசன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.