Arts, culture, entertainment and media
சின்ன கோட்டக்குப்பத்தில் ஆர்ப்பாட்டம்
கோட்டக்குப்பம்: சின்ன கோட்டக்குப்பத்தில் கட்டி திறக்கப்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை செயல்பாடுக்கு கொண்டு வர வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட தந்தியரான்குப்பம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்நிலையில் சின்ன கோட்டக்குப்பம் பகுதியில் ரூ. 1 கோடியே 36 லட்சம் மதிப்பீட்டில் புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டி, கடந்த ஜனவரியில் தி.மு.க., ஆட்சியின் போது திறக்கப்பட்டது.
இந்த ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் திறக்கப்பட்டும், இதுவரை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. எனவே இந்த புதிய சுகாதார நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தியும், நடவடிக்கை எடுக்காத சுகாதார துறை அதிகாரிகளை கண்டித்தும் 13, 14, 23, 24, 25 ஆகிய வார்டுகளை சேர்ந்த மக்கள் மற்றும் கவுன்சிலர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது.
அதன் படி நேற்று அப்பகுதி மக்கள், சின்ன கோட்டக்குப்பத்தில் இருந்து திரளாக ஊர்வலமாக கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகம் நோக்கி வந்தனர். அங்கு நகராட்சி அலுவலகம் எதிரில், விரைந்து நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை திறக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். விரைவில் ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்காவிட்டாமல் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.