Politics
குளிர்சாதனப் பெட்டி வெடித்து தீ விபத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு; கர்நாடகவில் பயங்கரம்...

பாரதி, ஷாரதா, கங்கா, பிரியா ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். மீட்கப்பட்ட இருவருக்கும் 60 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
கர்நாடகா மாநிலம் பெலகாவியில் வீட்டில் இருந்த குளிர்சாதனப் பெட்டி வெடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.
சாவத் கல்லி பகுதியைச் சேர்ந்தவர் கஜானன். இவர் தனது குடும்பத்தினருடன் ஷெட் போன்ற வீட்டில் வசித்து வந்தார். அவர்கள் விநாயகர் சதுர்த்தியையொட்டி சிலை வாங்கி, மின் விளக்குகளால் அலங்கரித்து வழிபட்டதாகத் தெரிகிறது. இரவு நேரத்தில் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்தபோது, பலத்த சத்தத்துடன் அவர்களது வீட்டில் தீ பரவியுள்ளது. உடனே அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது, அவர்களது அறை முழுவதும் தீ பரவியிருந்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், கஜானன் மற்றும் ரோஷன் ஆகியோரை மீட்டனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், வீட்டில் இருந்த குளிர்சாதனப் பெட்டி வெடித்ததில் தீ விபத்து நடந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிள்ளையார் சிலையை அலங்கரிக்க வைக்கப்பட்ட மின் விளக்குகளில் இருந்து மின் கசிவு ஏற்பட்டு விபத்து நடந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
