திருடு போன 309 மொபைல் போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு

பெரும்பாக்கம்: சென்னை புறநகர் பகுதியில் திருடு போன, 309 மொபைல் போன்களை கைப்பற்றிய போலீசார் உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனரகத்திற்கு உட்பட்ட செம்மஞ்சேரி, கேளம்பாக்கம், சேலையூர் ஆகிய மூன்று காவல் உதவிக் கமிஷனர் சரகத்தில் உள்ள, 10 காவல் நிலைய எல்லையில் திருடுப்போன மொபைல் போன்கள் கண்டு பிடித்து தரும்படி புகார்கள் வந்தன.
இதையடுத்து, பள்ளிக்கரணை துணைக் கமிஷனர் ரகுபதி மற்றும் சைபர் கிரைம் போலீசார் இணைந்து பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து வந்து, இங்கு திருடப்பட்ட மொபைல் போன்களை மீட்டனர். கடந்த பத்து நாட்களில் மட்டும் கானத்துார் காவல் நிலையத்தில், 60க்கும் மேற்பட்ட மொபைல் போன்களை பறிமுதல் செய்துள்ளனர்.
அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட, 309 மொபைல் போன்களை பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து, உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. செம்மஞ்சேரி உதவிக் கமிஷனர் கந்தன் உரிமையாளர்களிடம் மொபைல் போன்களை வழங்கினார்.