Economy, business and finance
என்.எஸ்.இ IPO... வாங்கலாமா, வேண்டாமா? முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

இந்த வெளியீட்டின் மூலம் சுமார் ரூ.30,000 கோடி திரட்டப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இந்தியாவின் மிகப்பெரிய ஐ.பி.ஓ-க்களில் ஒன்றாக அமையக் கூடும். - பணம் யுவர் சாய்ஸ்... ஷேர் போர்ட்ஃபோலியோ..! - 91
கிட்டத்தட்ட பத்தாண்டு காலக் காத்திருப்புக்குப் பிறகு, தேசிய பங்குச் சந்தை (NSE) பொதுப் பங்கு வெளியீட்டுக்குத் தயாராகி உள்ளது. இந்த ஐபிஓ-வில் அதிகபட்சமாக 14.89 கோடி பங்குகள் Offer for Sale (OFS) முறையில் விற்கப்பட உள்ளன. இது என்.எஸ்.இ-யின் மொத்த பங்கு களில் சுமார் 6%. இந்தப் பங்கு விற்பனையிலிருந்து என்.எஸ்.இ நிறுவனத்திற்கு நேரடியாகப் பணம் கிடைக்காது.
இந்த வெளியீட்டின் மூலம் சுமார் ரூ.30,000 கோடி திரட்டப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இந்தியாவின் மிகப்பெரிய ஐ.பி.ஓ-க்களில் ஒன்றாக அமையக் கூடும். வரும் செப்டம்பர் 21-ம் தேதி தொடங்கும் வாரத்தில் சந்தையில் பட்டியலிடப்படுவதை இலக்காகக் கொண்டுள்ளதாகவும், அதற்கான விலை வரம்பு விரைவில் அறிவிக்கப் படும் என்றும் கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக என்.எஸ்.இ-யை கவனித்து வரும் முதலீட்டாளர் களுக்கு அதன் ஐ.பி.ஓ அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், முதலீட்டாளர்கள் கேட்க வேண்டிய முக்கியமான கேள்வி, என்.எஸ்.இ-யின் ஐ.பி.ஓ எந்தளவுக்கு முதலீட்டாளர்களுக்குப் பலன் தரும் என்பதுதான்.
என்.எஸ்.இ பற்றி முதலீட்டாளர் களுக்கு புதிதாக அறிமுகப்படுத்த வேண்டிய அவசிய மில்லை. ஆனால், அதன் போட்டி நிலையைக் கவனிக்க வேண்டும். நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் ஈக்விட்டி கேஷ் மார்க்கெட் செயல்பாடுகளில் சுமார் 93% என்.எஸ்.இ-யின் பங்காக இருந்தது. ஈக்விட்டி ஃப்யூச்சர்ஸில் கிட்டத்தட்ட 100% பங்கையும், ஈக்விட்டி ஆப்ஷன்ஸ் பிரீமியம் டர்ன்ஓவரில் சுமார் 75% பங்கையும் என்.எஸ்.இ கொண்டிருந்தது. கான்ட்ராக்ட்ஸ் வர்த்தக அடிப்படையில் உலகின் மிகப்பெரிய டெரிவேட்டிவ் சந்தையாகவும் என்.எஸ்.இ தொடர்ந்து இருக்கிறது. அந்த வகையில் இது நெட்வொர்க் எஃபெக்ட் பிசினஸ் மாடலுக்கு ஒரு சிறந்த உதாரணமாகவும் உள்ளது.
லிக்விடிட்டி அதிகமானால் வர்த்தகர்கள் ஈர்க்கப் படுகிறார்கள். வர்த்தகர்கள் அதிகரித்தால் தரகர்கள் மற்றும் தரகு நிறுவனங்கள் ஈர்க்கப்படுகிறார்கள்.அதிகமான பங்கேற்பாளர்கள் வரும்போது சந்தை லிக்விடிட்டி மேலும் அதிகரிக்கிறது. அப்போது போட்டி இன்னும் கடினமாகிறது. இதனால் என்.எஸ்.இ மிகவும் வலுவான இடத்தை உருவாக்குகிறது.
பி.எஸ்.இ தனது தயாரிப்புகளை மேம்படுத்தி, சந்தை பங்களிப்பை அதிகரித்து, வேகமாக வளரும் சாத்தியங் களைக் கொண்டுள்ளது. ஆனால், என்.எஸ்.இ-யின் லிக்விடிட்டி அட்வான்டேஜை மாற்றுவது முற்றிலும் வேறுபட்ட சவாலாகும். ஒரு எக்ஸ்சேஞ்ச் தொழில்நுட்பத்தை மட்டும் கொண்டு உருவாக்க முடியாது. அதற்கு லிக்விடிட்டி, நம்பிக்கை, ஒழுங்குறை நம்பகத்தன்மை, கிளியரிங் இன்ஃப்ராஸ்ட்ரக்சர், அதிக பங்கேற்பாளர்கள் மற்றும் வளர்ச்சி ஆகிய அனைத்தும் தேவை. என்.எஸ்.இ-யிடம் இவை அனைத்தும் உள்ளன.
என்.எஸ்.இ-யின் இரண்டாவது முக்கிய அம்சம் அதன் நிதி நிலை. கடந்த நிதி ஆண்டில் அதன் மொத்த வருமானம் ரூ.18,713 கோடி. நிகர லாபம் ரூ.10,302 கோடி. செயல்பாட்டு வருவாய் ரூ.16,601 கோடி. என்.எஸ்.இ-யின் நிகர லாபம் அதன் மொத்த வருமானத்தில் பாதிக்கும் மேலாக இருக்கிறது. இது முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம்.
ஒரு எக்ஸ்சேஞ்ச் அதற்கான அடிப்படை தொழில்நுட்ப மற்றும் சந்தை உள்கட்டமைப்புகளை நிறுவிய பிறகு கூடுதலாக அதிகரிக்கும் பரிவர்த்தனை களுக்கு ஏற்ப கூடுதல் செலவுகள் அதிகரிக்காது. இதன் விளைவாக, எக்ஸ்சேஞ்ச் பிசினஸ் மிகப் பெரிய அளவில் வளர்ச்சி அடையும். இங்குதான் என்.எஸ்.இ பல பாரம்பர்ய நிதி நிறுவனங்களிலிருந்து வேறுபடு கிறது. ஒரு வங்கி தனது கடன் புத்தகத்தை வளர்க்க கணிசமான மூலதனத்தைப் பயன்படுத்த வேண்டும்.
ஒரு என்.பி.எஃப்.சி கூடுதல் சொத்துகளைப் பயன்படுத்த வேண்டும். காப்பீடு நிறுவனம் அண்டர் ரைட்டிங் மற்றும் மூலதன ரிஸ்க்கை ஏற்க வேண்டும்.ஆனால், என்.எஸ்.இ முதன்மையாக நிதி நடவடிக்கைகள் நடைபெறும் உள்கட்டமைப்பை வழங்குகிறது. செலவு குறைவாக, ரிஸ்க் குறைவாக லாபம் அதிகமாக இருக்கும் பிசினஸ் மாடலுடன் உள்ளது. ஆனால், ஒரு சிக்கல் உள்ளது. எக்ஸ்சேஞ்ச் அதன் பரிவர்த்தனைகள் மீதான சார்புடன் இருப்பதால் என்.எஸ்.இ-யின் முதலீட்டுப் பார்வை முழுமையானதாக இல்லை.
பரிவர்த்தனை கட்டணங்களே அதன் முக்கியமான வருவாய் ஆதாரமாக உள்ளன. கடந்த நிதி ஆண்டில் பரிவர்த்தனை கட்டணங்கள் மூலம் சுமார் ரூ.13,057 கோடி வருவாய் ஈட்டியது. இதே காலத்தில் பி.எஸ்.இ சுமார் ரூ.3,795 கோடி மட்டுமே ஈட்டியது. அதிலும் டெரிவேட்டிவ்ஸ் பங்கு மிகவும் முக்கியமானது. எனவே, இண்டெக்ஸ் டெரிவேட்டிவ்ஸ், எக்ஸ்பயரி ஸ்ட்ரக்ச்சர், பொசிஷன் லிமிட், பரிவர்த்தனை கட்டணங்கள், வரி, மார்ஜின் போன்ற விஷயங்களில் ரெகுலேட்டரி மாற்றங் கள் ஏற்பட்டால் அது என்.எஸ்.இ-யின் செயல்பாடுகளையும் வளர்ச்சியையும் பாதிக்கலாம். அதனால் என்.எஸ்.இ-யின் வருமானமும் பாதிக்கப்படலாம்.
சமீபத்திய ரெகுலேட்டரி நடவடிக்கைகள் ஏற்கெனவே டெரிவேட்டிவ் வால்யூமை பாதித்துள்ளன. ராய்ட்டர்ஸ் தகவலின் படி, ஆகஸ்ட் மாதத்தில் என்.எஸ்.இ-யின் சராசரி தினசரி டெரிவேட்டிவ்ஸ் டர்ன்ஓவர் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 16% குறைந்து உள்ளது. ஆப்ஷன்ஸ் டர்ன்ஓவர் ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது 20% குறைந்துள்ளது.
என்.எஸ்.இ பிசினஸ் மாடல் வலுவானது, வளர்ச்சி சாத்தியங்களைக் கொண்டது. ஆனால், அதன் வளர்ச்சி யும் வருவாயும் ரெகுலேஷன் மற்றும் சந்தை செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்களால் பாதிக்கப்படாமல் இல்லை. இந்த வேறுபாடுதான் முதலீட்டாளர்கள் மிகவும் முக்கிய மாகக் கவனிக்க வேண்டியதாக இருக்கிறது. அதேசமயம் நீண்ட காலத்தில் பார்க்கும்போது இன்னும் சக்திவாய்ந்த முதலீட்டு வாதம் டெரிவேட்டிவ்களைத் தாண்டி இருக்கலாம்.
இந்தியாவில் குடும்ப சேமிப்பில் ஒரு முக்கியமான மாற்றம் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு குடும்பத்தி லிருந்தும் பணம் மெதுவாக வங்கி டெபாசிட், தங்கம், ரியல் எஸ்டேட் ஆகியவற்றிலிருந்து பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட், இ.டி.எஃப், பென்ஷன், இன்ஷூரன்ஸ், பாண்டுகள் உள்ளிட்ட சொத்துகளுக்கு மாறிக் கொண்டிருக்கிறது.
எனவே, இந்தியாவின் நிதிச் சந்தை மேன்மேலும் வளரும்போது, ரீடெய்ல் முதலீட்டாளர் களின் அதிக பங்கேற்பு, நிறுவனங்களின் ஈடுபாடு அதிகரிப்பு, ஐ.பி.ஓ வால்யூம் அதிகரிப்பு, இ.டி.எஃப் மற்றும் பாஸிவ் முதலீடுகள் அதிகரிப்பு, இண்டெக்ஸ் சார்ந்த தயாரிப்புகளின் வளர்ச்சி, கடன் மற்றும் கமாடிட்டி சந்தைகளின் வளர்ச்சி போன்றவற்றால் என்.எஸ்.இ பெரும் பயனடையலாம்.
கடந்த நிதியாண்டில் நிஃப்டி இண்டெக்ஸை அடிப்படையாகக் கொண்ட சொத்துகள் சுமார் ரூ.8.14 லட்சம் கோடி அளவை எட்டின. இது பி.எஸ்.இ இண்டெக்ஸை அடிப்படை யாகக் கொண்ட சொத்துகளை விட மூன்று மடங்குக்கும் அதிகம். இங்கு தான் என்.எஸ்.இ-ன் வருவாய் ஆதாரங்களின் டைவர்சிஃபிகேஷனுக் கான சாத்தியங்கள் உள்ளன. எதிர்காலத்தில் அவை சாத்திய மாவதைப் பொறுத்து என்.எஸ்.இ-ன் வளர்ச்சி இருக்கும்.
இறுதியாக என்.எஸ்.இ ஐ.பி.ஓ மதிப்பீடு குறித்த கேள்விக்கு வருவோம். இதுதான் இந்த கட்டுரையின் மிக முக்கியமான பகுதி. இன்னும் என்.எஸ்.இ ஐ.பி.ஓ-ன் விலை வரம்பு அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், இதுவரையிலான கணிப்புகள்படி மதிப்பீடு சுமார் ரூ.5 லட்சம் கோடியாக இருக்கலாம் என்றும், வெளியீட்டு விலை ஒரு பங்குக்கு சுமார் ரூ.1,800 இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த விலை நிறுவன முதலீட்டாளர் கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருப்பதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. இருப்பினும், அதிகாரபூர்வ விலை அறிவிக்கப்பட்ட பிறகே உண்மையான மதிப்பீடு பற்றித் தெரியும். ரூ.5 லட்சம் கோடி மதிப்பீடு என்ற அளவில் என்.எஸ்.இ, பி.எஸ்.இ-யை விட குறைந்த P/E-ல் வர்த்தகம் ஆகும் என்பது கூடுதல் சுவாரஸ்யமான தாக உள்ளது. காரணம் பி.எஸ்.இ-யின் மதிப்பீடு கடந்த நிதி ஆண்டின் வருவாய் அடிப்படையில் பார்க்கும் போது சுமார் 67x என மதிப்பிடப் பட்டுள்ளது.
உண்மையில் என்.எஸ்.இ ஒரு வித்தியாசமான ஐ.பி.ஓ. இது முதலீட்டாளர்கள் புரிந்துகொள்ள முடியாத நியூ ஏஜ் பிசினஸ் அல்ல. மாறாக, ஏற்கெனவே பரிச்சயமான, தெளிவாகப் புரியக்கூடிய அதே நேரம் சந்தையில் வலுவான முன்னிலையில் இருக்கும், அதிக லாபம் ஈட்டும் பிசினஸ்தான் என்.எஸ்.இ உடையது. இதனால் பிசினஸ் வாய்ப்புகளையும் ரிஸ்க்கையும் ஒப்பீட்டளவில் எளிதாகப் புரிந்துகொள்ள முடிகிறது.
ஆனால், முதலீட்டுக்குக் கவனிப்பதில் உள்ள பெரிய ரிஸ்க் அதன் மதிப்பீடுதான். எனவே, வழக்கமான மைண்ட்செட்டுடன் இந்த ஐ.பி.ஓ-வை அணுகாமல் இதை ஐ.பி.ஓ விலையில் வாங்கினால், அடுத்த 5 முதல் 10 ஆண்டுகள் வைத்திருந்தால், எவ்வளவு ரிட்டர்ன் எதிர்பார்க்க முடியும் என்ற கேள்வியுடன் அணுக வேண்டும். மேலும், என்.எஸ்.இ-ன் சாதகமான அம்சங்கள் அதன் ஐ.பி.ஓ விலையில் ஏற்கெனவே எந்த அளவுக்குப் பிரதிபலித்துள்ளது என்பதையும் பார்க்க வேண்டும்.
சரியான அணுகுமுறை என்பதை, அதிகாரபூர்வ விலை வரம்பு என்ன, அதன் சந்தை மதிப்பு, வருவாய் வளர்ச்சி அடிப்படையில் P/E-ஐ கணக்கிடுங்கள். ஐ.பி.ஓ விலையில் ஏற்கெனவே வளர்ச்சிப் எதிர்பார்ப்பு எந்தளவுக்குப் பிரதிபலித்துள்ளது என்பதை மதிப்பிடுங்கள். பின்னர் முடிவு செய்யுங்கள்.
(பணம் பெருகும்)
