நன்மங்கலம் – கீழ்க்கட்டளை ஏரி வரை மூடுகால்வாய் அமைக்க வேண்டுகோள்
நன்மங்கலம்: நன்மங்கலம் ஏரி உபரிநீர், கீழ்க்கட்டளை ஏரிக்கு செல்லும் வகையில் மூடுகால்வாய் அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பரங்கிமலை ஒன்றியம், நன்மங்கலம் ஊராட்சியில் உள்ள நன்மங்கலம் ஏரி, 120 ஏக்கர் பரப்பளவு உடையது. இந்த ஏரியின் உபரி நீர், கீழ்க்கட்டளை மற்றும் நாராயணபுரம் ஏரிகள் வழியாக, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அடைய வேண்டும்.
இதில், நன்மங்கல் ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற முறையான கால்வாய் வசதி இல்லை. இதனால், அருள் முருகன், திருமலை, கமலம், வீரமணி உள்ளிட்ட நகர்களில் 2,000-க்கும் மேற்பட்ட வீடுகளில், வெள்ளநீர் புகுந்து, மக்கள் அவதிக்குள்ளாகும் நிலை உள்ளது.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:
நன்மங்கலம் ஏரி உபரி நீர், தாழ்வான விவசாய நிலங்களுக்கான கால்வாய் வழியாக, கீழ்க்கட்டளை ஏரியை அடையும். விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாறி, குடியிருப்புகள் பெருகிவிட்டன. இதனால், தண்ணீர் செல்ல வழியின்றி, குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுகிறது.
தவிர, ஏரியில் ஆங்காங்கே கலக்கும் கழிவுநீர், மழைநீருடன் சேர்ந்து வீடுகளை சூழ்வதால், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. நன்மங்கலம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர், கீழ்க்கட்டளை ஏரிக்கு செல்லும் வகையில், மாநகராட்சி மூடுகால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
இவ்வாறு அவர்கள் கூறினர்.