திருடப்பட்ட மரகதசிலை; தனிப்படை காவல் வேட்டையில் சிக்கியது!

பல கோடி ரூபாய் மதிப்பிலான திருடப்பட்ட மரகத முருகர் சிலை, கைவிடப்பட்ட கல் குவாரியில் இருந்து மீட்பு, மூவர் கைது
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அடுத்த பெருக்கரணை கிராமத்தில் கனக மலை என்ற சிறிய மலைக் குன்றின் மீது விசேஷமான மரகத கற்களால் ஆன முருகர் சிலை உள்ளது. கடந்த 1ம் தேதி இரவு வழக்கம்போல் கோயில் பூசாரிகள் கோயிலின் நடையை சாத்தி விட்டு சென்றனர். மறுநாள் பூஜைக்காக கோயில் நடை திறக்கப்படும்போது கோயிலின் கருவறையில் இருந்த விலைமதிக்க முடியாத மரகத கல்லாலான தண்டபாணி சிலையை மர்மநபர்கள் திருடி சென்றிருப்பது தெரிந்தது. தகவல் அறிந்த சித்தாமூர் போலீஸார், சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.எஸ்பி.அய்மன்ஜமால் தலைமையில் 5 தனிப்படையினர் சிலையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில்,100 சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து பதிவான காட்சிகள் மற்றும் போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன், இளவழகன், ஜெயபால் மூவரை சந்தேகத்தின் பேரில் தனிப்படை போலீஸார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில், கோயிலில் இருந்து மரகத சிலையை திருடியதை ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. மேலும், கோயிலுக்கு அருகேயுள்ள புத்தூர் பகுதியில் உள்ள கைவிடப்பட்ட கல்குவாரியில் உள்ள குட்டையில் சிலையை மறைத்து வைத்திருப்பது தெரிந்தது. இதையடுத்து, போலீஸார் குட்டையிலிருந்த மரகதசிலையை மீட்டனர். மேலும், செய்யூர் வட்டாட்சியர் முன்னிலையில் அரசு கருவூலத்தில் மீட்கப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான மரகதசிலை ஒப்படைக்கப்பட்டது. மேலும் திருடப்பட்ட மரகத சிலை மீண்டும் கிடைத்ததால் கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
