Economy, business and finance
ஆண்டுக்கு 4 வர்த்தக சந்திப்பு சந்தை வாய்ப்பை அதிகரிக்கும் அரசின் அறிவிப்பை வரவேற்கும் ஏற்றுமதியாளர்கள்

திருப்பூர்: 'வெளிநாட்டு வர்த்தகர்களை அழைத்து, உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுடன் வர்த்தக சந்திப்பு நடத்தப்படும்' என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தொழில்துறையினரின் பல்வேறு கோரிக்கைகளை பரிசீலித்து, தமிழக அரசு புதிய திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், நீண்டகால எதிர்பார்ப்புகளும் தற்போது அறிவிப்புகளாக வெளியாகி வருவதாக திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினர் கூறுகின்றனர். ஈரோடு, கரூர் மாவட்ட ஜவுளி தொழில் மேம்பாட்டுக்கான அறிவிப்புகளும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் நான்கு முறை, உற்பத்தியாளர்கள் மற்றும் வாங்குபவர்களுக்கு இடையேயான சந்திப்பு நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்துவது பெரும் சவாலாக இருந்து வருகிறது.
இந்நிலையில், உற்பத்தியாளர் - வாங்குபவர் சந்திப்பு நடத்தப்படுவது, புதிய மற்றும் நிரந்தரமான சந்தை வாய்ப்புகளை உருவாக்கும்.
இதன் வாயிலாக, வெளிநாட்டு வர்த்தகர்களை அழைத்து, ஏற்றுமதியாள ர்கள் தங்கள் உற்பத்தி பொருட்களை நேரடியாக அறிமுகப்படுத்தி, வர்த்தக விசாரணை மேற்கொள்ளும் வாய்ப்பு உருவாகும் என தொழில்துறையினர் வரவேற்றுள்ளனர்.