Politics
'2029-ல் டெல்லி நாற்காலிக்கு போட்டி? ரேஸில் ராகுல், விஜய், திருமா?''-விளக்கும் விசிக இசையமுதன்

2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தந்த உத்வேகத்தில், தமிழக அரசியல் கட்சிகள் தற்போதே 2029 நாடாளுமன்றத் தேர்தலுக்கான காய் நகர்த்தல்களைத் தொடங்கிவிட்டன. மத்தியில் கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் ஒரு வலுவான கூட்டணியை அமைத்து, டெல்லி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதில் தென் மாநிலக் கட்சிகள் தீவிரமாக உள்ளன. குறிப்பாக, இதுவரை இந்திய வரலாற்றிலேயே தென்னிந்தியாவைச் சேர்ந்த அல்லது விளிம்புநிலைச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமராக வரவில்லை என்ற ஏக்கம் நீண்டகாலமாக இருந்து வருகிறது.
பெரம்பலூர் திருமண விழாவில் விசிக தலைவர் திருமாவளவனை 'மக்களின் முதல்வரே' என்று வரவேற்று வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனர்கள் தவெக-வினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து நக்கீரன் டிவிக்கு விசிக கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநிலச் செயலாளர் இசையமுதன் கொடுத்த சிறப்பு நோணலில் கூறுகையில்,
"2029 நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியில் யார் பிரதமர் வேட்பாளர் என்ற விவாதத்தில் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள் தீவிரமாக உள்ளன. காங்கிரஸ் தரப்பில் தங்களின் 5 எம்எல்ஏ-க்களைக் காட்டி, ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்றும், அதை ஏற்காவிட்டால் அமைச்சரவையை விட்டே வெளியேறுவோம் என்றும் அழுத்தம் கொடுக்கிறார்கள். மறுபுறம் தவெகவினர் தங்களின் தலைவர் விஜய்தான் அடுத்த பிரதமர் என்று செவிவழியாகப் பிரச்சாரம் செய்கிறார்கள். அவர்கள் யாராக இருந்தாலும் எங்களது வாழ்த்துகள். ஆனால், எங்களது விசிக தொண்டர்களின் ஒட்டுமொத்த ஆசையும் விருப்பமும் என்னவென்றால், எங்களது தலைவர் திருமாவளவன் நாட்டின் பிரதமராக வர வேண்டும் என்பதுதான்.
இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றில் இதுவரை விளிம்புநிலை மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தஒரு நபர் கூடப் பிரதமர் நாற்காலியில் அமர்ந்ததே இல்லை. கடந்த காலத்தில் பெருந்தலைவர் காமராஜருக்கு அப்படி ஒரு வாய்ப்பு தென்னிந்தியச் சார்பாகக் கிடைத்த போதும் அது நழுவிப் போனது. தற்போது எங்களது தலைவர் திருமாவளவன் மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்து, தேசிய அளவில் ஒரு முதிர்ந்த தலைவராக உயர்ந்து நிற்கிறார். ஆந்திரா, கேரளா, தெலுங்கானா, பாண்டிச்சேரி மற்றும் தமிழ்நாடு ஆகிய ஐந்து தென் மாநிலங்களும் ஒன்றிணைந்து எங்களது தலைவரைப் புதிய பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதில் என்ன தவறு இருக்க முடியும்?.
நாங்கள் அண்ணன் விஜயை தமிழ்நாட்டின் முதலமைச்சராக்குவதற்கு ஒரு பெரும் வாய்ப்பைக் கொடுத்தோம். நூறு ஆண்டுகள் கழித்துப் பார்த்தாலும் 'திருமாவளவனால் தான் விஜய்க்கு இந்த வாய்ப்பு கிடைத்தது' என்ற வரலாற்றுப் புகழ் இருக்கும். அப்படி இருக்கும் போது, எங்கள் தலைவர் பிரதமராவதற்கு விஜய் ஏன் உதவி செய்ய மாட்டார்?. கண்டிப்பான முறையில் அவர் உதவி செய்தே ஆக வேண்டும். பெரம்பலூரில் தொண்டர்கள் எங்களது தலைவரை 'மக்களின் முதல்வர்' என்று டிஜிட்டல் போர்டு வைத்ததில் தவெக-வினருக்கு ஏன் மனஸ்தாபம் வர வேண்டும்? . நாங்கள் திமுக-வோடு இருந்த போதே 'அடுத்த பிரதமரே' என்று போர்டு வைத்துள்ளோம். இதையெல்லாம் ஒரு மோதலாகப் பார்க்காமல் கடந்து செல்ல வேண்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், விசிக மற்றும் தவெக அனைத்தும் உள்ளடக்கிய ஒரு மெகா கூட்டணி அமைந்து, தமிழ்நாட்டின் 40-க்கு 40 தொகுதிகளையும் வென்று டெல்லியை ஆளுவோம்" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
