ஊராட்சி அமைப்புகளை மறுசீரமைப்பு செய்ய ஆணையம் அமைக்க வேண்டும் சங்கதலைவர் ரமேஷ் பேட்டி
விருதுநகர்: '' தமிழகத்தில் கிராம ஊராட்சி அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்ட நிலையில் திட்டங்களின் பலன்கள் மக்களுக்கு சென்றடைவதில் தேவையற்ற கால, பொருளாதார விரயம் ஏற்படுகிறது. எனவே ஊராட்சி ஒன்றியங்கள், கிராம ஊராட்சிகளில் எல்லைகளின் மறுசீரமைப்பு, பிரித்தல், சேர்த்தல் நடவடிக்கை செய்ய மறுசீரமைப்பு ஆணையத்தை ஏற்படுத்த வேண்டும் ,''என விருதுநகரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் மாநில தலைவர் ரமேஷ் கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது: தமிழகத்தில் கிராம ஊராட்சி அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு நுாறு ஆண்டுகளுக்கு மேல் , ஊராட்சி ஒன்றியங்கள் ஏற்படுத்தப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தற்போதைய வளர்ச்சி, பொருளாதார சூழலுக்கு ஏற்றவாறு மாவட்டங்கள், வருவாய் கோட்டங்கள், வட்டங்கள் பிரிக்கப்பட்டு வருகிறது.
இதே சூழல் ஊராட்சி அமைப்புகளிலும் தேவை. சமச்சீரற்ற நிலை உள்ளதால் திட்டங்களின் பலன்கள் மக்களுக்கு சென்றடைவதில் கால, பொருளாதார விரயம் ஏற்படுகிறது. எனவே ஊராட்சிகள், ஒன்றியங்களின் எல்லைகளின் மறுசீரமைப்பு செய்வது தேவையென்பதால் ஊராட்சி அமைப்புகளின் மறுசீரமைப்பு ஆணையத்தை அமைக்க வேண்டும்.
தமிழக அரசின் துறைகளில் ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறை மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகளின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதோடு மட்டுமல்லாமல் உள்ளாட்சி தேர்தல்களை நடத்துவது, சட்டப்பூர்வமான நிர்வாக நடவடிக்கைகளையும் செய்வதோடு உலகிலேயே அதிக மக்கள் பயன்பெறும் சமூக பாதுகாப்பு திட்டமான நுாறு நாள் திட்டத்தை அமலாக்கம் செய்து வருகிறது. எனவே ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறையை சிறப்பு துறையாக அறிவித்து மேம்படுத்தப்பட்ட ஊதியம்வழங்க வேண்டும்.
கிராம ஊராட்சிகளின் செயல் அலுவலர் பொறுப்பை ஊராட்சியின் செயலாளருக்கு வழங்க வேண்டும். ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறையின் தலைவர் பணியிடத்தை அரசு செயலாளர் நிலை பணியிடமாக தரம் உயர்த்தி, நிரந்தரமாக வளர்ச்சி ஆணையராக நியமிக்க வேண்டும் என்றார்.