Sport
இந்தியா - ஆப்கானிஸ்தான் முதல் டி20 போட்டி இன்று தொடக்கம் - ஆடும் லெவனில் மாற்றமா?

ஆப்கானிஸ்தான் நடத்தும் சொந்த தொடர் என்றாலும், பாதுகாப்பு காரணங்களால் மூன்று போட்டிகளும் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகின்றன.
இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் இன்று டெல்லியில் தொடங்குகிறது. இந்த தொடர் ஆப்கானிஸ்தான் நடத்தும் சொந்த தொடர் என்றாலும், பாதுகாப்பு காரணங்களால் மூன்று போட்டிகளும் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகின்றன. வெளிநாட்டு அணி ஒன்று இந்தியாவை சொந்த மண்ணாக ஏற்று இந்திய கிரிக்கெட் அணியை எதிர்கொள்வது இதுவே முதல்முறையாகும்.
ஸ்ரேயஸ் ஐயர் தலைமையில் இந்திய அணி களம் இறங்குகிறது. இப்ராஹிம் சத்ரான் முதல்முறையாக முழுநேர டி20 கேப்டனாக ஆப்கானிஸ்தான் அணியை வழிநடத்த உள்ளார். இந்திய அணியைப் பொறுத்தவரை இளம் வீரர் சூர்யவன்ஷி, அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். தொடக்க ஆட்டக்காரர்கள் யார் என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அணியில் ரஷித் கான், முகமது நபி, ரஹ்மானுல்லா குர்பாஸ், நூர் அகமது உள்ளிட்ட வீரர்கள் உள்ளனர். காயத்திலிருந்து திரும்பிய நவீன் உல் ஹக் மீதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இன்று இரவு 7 மணிக்கு இந்த போட்டி நடைபெற உள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி 9 டி20 போட்டிகளில் இந்திய அணி 8 வெற்றிகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரராக அனுபவமிக்க சஞ்சு சாம்சனை களமிறக்குவதா அல்லது இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷிக்கு வாய்ப்பளிப்பதா என்ற கடும் போட்டி உருவாகியுள்ளது. இங்கிலாந்து தொடரின் போது சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக சூரியவன்ஷி சேர்க்கப்பட்ட போதிலும், தொடரின் கடைசிப் போட்டியில் மீண்டும் சாம்சனே களமிறக்கப்பட்டார். அபிஷேக் சர்மாவுடன் சஞ்சு சாம்சன் இணைவது டி20 போட்டிகளில் நிலையான மற்றும் வெற்றிகரமான தொடக்கமாக இருந்துள்ளது.
வலைப்பயிற்சியில், ஜஸ்ப்ரீத் பும்ராவின் அதிவேகப் பந்துவீச்சை எதிர்கொள்ள சூரியவன்ஷி சற்று சிரமப்பட்ட நிலையில், சஞ்சு சாம்சன் பந்துகளை மிகவும் நேர்த்தியாகக் கையாண்டார். இருப்பினும், ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை எதிர்கொள்வது சூரியவன்ஷியின் அதிரடி ஆட்டத்திற்குப் பொருத்தமாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.
வலைப்பயிற்சியின் போது விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் இஷான் கிஷனுக்கு முதுகில் காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. ஒருவேளை இஷான் கிஷன் இப்போட்டியில் விளையாட முடியாமல் போனால், சஞ்சு சாம்சன் மற்றும் வைபவ் சூரியவன்ஷி ஆகிய இருவருமே ஆடும் லெவனில் இடம்பெற வாய்ப்புள்ளது. தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் ஆலோசனைப்படி, ஆல்ரவுண்டர்களான அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அணியில் இடம்பெறுவது உறுதி என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாவது சுழற்பந்து வீச்சாளராக வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்படுவாரா அல்லது வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தாகூருக்கு வாய்ப்பு தரப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதேபோன்று பும்ரா, அர்ஷ்தீப் சிங் மற்றும் ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் முதன்மைத் தேர்வாக உள்ளனர். ஜப்பானில் நடக்கவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு முன்பாக, ரஷீத் கான், நூர் அகமது மற்றும் முஜீப் உர் ரஹ்மான் ஆகியோரைக் கொண்ட உலகத் தரம் வாய்ந்த ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வது இந்திய அணிக்குச் சிறந்த பயிற்சியாக அமையும். மேலும், டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தின் பிட்ச் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
