Politics
அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி வீடுகளில் அமலாக்கத்துறை ரெய்டு! : மகள் பிரியங்கா எம்.பி., வீடும் சோதனையில் தப்பவில்லை

பெங்களூரு: உகாண்டா, ருவாண்டா நாடுகளில் உள்ள முன்னணி சுரங்க நிறுவனத்தில் முதலீடு செய்ததாக கிடைத்த தகவலின்படி, கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி, அவரது மகளும், காங்கிரஸ் எம்.பி.,யுமான பிரியங்கா வீடுகள் உட்பட 18 இடங்களில், அமலாக்கத்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 'எஸ்.டி., சமூக தலைவரான சதீஷை அரசியல்ரீதியாக பா.ஜ., குறிவைக்கிறது' என, முதல்வர் சிவகுமார் குற்றம்சாட்டினார். சோதனையை கண்டித்து சதீஷ் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.
கர்நாடகாவில் முதல்வர் சிவகுமார் தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. பெலகாவி மாவட்டம், கோகாக் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., சதீஷ் ஜார்கிஹோளி, 64, பொதுத்பணித்துறை அமைச்சராக உள்ளார்.
பழங்குடியினமான எஸ்.டி., சமூகத்தை சேர்ந்த இவர், கர்நாடக அரசியலில், சக்தி வாய்ந்த தலைவராக உள்ளார். சர்க்கரை ஆலை உட்பட பல தொழில்களை நடத்துகிறார். இவரது மகள் பிரியங்கா, 29. இவர் சிக்கோடி தொகுதி காங்கிரஸ் எம்.பி.,யாக உள்ளார்.
சதீஷ் ஜார்கிஹோளி தங்கை மகாதேவியின் கணவர் மஞ்சுநாத். இவர், கர்நாடக அரசின் கலால் துறையில் கூடுதல் கமிஷனராக பணியாற்றுகிறார். தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, சட்ட விரோதமாக சொத்து சேர்த்து, சட்ட விரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதாக, கடந்த ஜூன் மாதம் மஞ்சுநாத்துக்கு சொந்தமான இடங்களில், ஈ.டி., எனும் மத்திய அரசின், அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அப்போது சிக்கிய சில ஆவணங்களை கைப்பற்றி எடுத்து சென்றனர்.
இந்நிலையில், நேற்று காலை பெங்களூரு குமாரகிருபா விருந்தினர் மாளிகைக்கு அருகில் உள்ள, சதீஷ் ஜார்கிஹோளியின் அரசு பங்களா, டாலர்ஸ் காலனியில் உள்ள வீடு, பெலகாவியின் கோகாக்கில் உள்ள அவரது சொந்த வீடு, பெலகாவி டவுனில் உள்ள மஞ்சுநாத்தின் வீடு.
சதீஷ் ஜார்கிஹோளியின் அலுவலகங்கள், நெருங்கிய ஆதரவாளர்கள் டாக்டர் கிரிஷ், ராஜு தரக ஷெட்டி, விட்டல் பிரசன்னா வீடுகள், கோவாவில் உள்ள அலுவலகங்கள் என, 18 இடங்களில், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், உள்ளூர் போலீசார் உதவியுடன், அமலாக்கத்துறையினர் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தியது.
சரியாக காலை, 6:30 மணிக்கு துவங்கிய சோதனை இரவு வரை நீடித்தது. அரசு பங்களாவில் சோதனை நடந்த போது, சதீஷ் ஜார்கிஹோளி அங்கு தான் இருந்தார். அந்த பங்களாவில் உள்ள அறைகளில் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தப்பட்டது.
அதுபோல, அந்த வீட்டின் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரசு கார், மற்ற கார்களிலும் டிக்கி, டேஸ்போர்டுகளை திறந்து, அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
மஞ்சுநாத்தின் வீட்டில் சோதனை நடத்திய போது, சிக்கிய ஆவணங்கள் அடிப்படையில் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. அது போல, கோகாக்கில் உள்ள சதீஷ் ஜார்கிஹோளி வீட்டில் இருந்த அவரது மகள் பிரியங்கா, மகன் ராகுலிடமும் பல கேள்விகளை கேட்டு அதிகாரிகள் திணறடித்தனர்.
அந்த வீட்டின் கணினியில் இருந்த தகவல்களை, அமலாக்க அதிகாரிகள் சேகரித்து கொண்டனர். சில முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
சதீஷ் ஜார்கிஹோளி வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டதை கண்டித்து, பெங்களூரு, பெலகாவி, பல்லாரி உள்ளிட்ட இடங்களில் அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். பெலகாவியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த, சதீஷின் ஆதரவாளர்கள், மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பி பேரணியாக சென்றனர்.
அதுபோல, பெங்களூரு அரசு பங்களா முன் போராட்டம் நடத்திய ஆதரவாளர்கள், 'எங்களை வீட்டிற்குள் செல்ல அனுமதியுங்கள்; ஒரு முறையாவது எங்கள் தலைவரை பார்த்து பேச வேண்டும்' என்றனர். அவர்களை அங்கிருந்து போலீசார் அப்புறப்படுத்தினர்.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன், மஞ்சுநாத் வீட்டில் நடத்திய சோதனையின் போது, சிக்கிய ஆவணங்கள் அடிப்படையில் சதீஷ் ஜார்கிஹோளி வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதாக, நேற்று காலையில் தகவல் பரவியது.
ஆனால் சோதனை நடத்தப்பட்டதற்கான காரணமே வேறு என்பது பின் தான் தெரிந்தது. அதாவது மஞ்சுநாத் வீட்டில் சோதனை நடத்திய போது கிடைத்த ஆவணங்களில், சில அதிர்ச்சி தகவல்களை அமலாக்கத்துறையினர் கண்டுபிடித்தனர்.
அந்த ஆவணங்களின்படி, இந்திய ரிசர்வ் வங்கியின் முறையான அனுமதியின்றி இல்லாமல், ஆப்பிரிக்க நாடுகளான உகாண்டா, ருவாண்டா போன்ற நாடுகளில் உள்ள சுரங்க நிறுவனம், பள்ளிகளில் சதீஷ் ஜார்கிஹோளி குடும்பத்தினர் பெருமளவில் பணம் முதலீடு செய்தது தெரிந்தது.
சட்ட விரோதமாக சேர்த்த பணத்தை ஹவாலா மூலமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி அங்கு சொத்துக்களாக மாற்றியதும் தெரிந்தது. இதன் அடிப்படையில் சதீஷ் ஜார்கிஹோளி, பிரியங்கா, ராகுல், மஞ்சுநாத், கிரிஷ், ராஜு, விட்டல் ஆகியோர் மீது 'பெமா' எனும் அன்னிய செலவாணி மேலாண்மை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
சதீஷ் ஜார்கிஹோளியின் வெளிநாட்டு பயணங்கள், பணபரிமாற்ற விபரங்களையும் கண்காணித்தனர். உகாண்டாவின் சுரங்க, கல்வி நிறுவனங்களில் அவர் முதலீடு செய்தற்கான ஆவணங்களையும் திரட்டினர்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், நீதிமன்றத்தில் அனுமதி பெற்று நேற்று சோதனை நடத்தப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறையின் சோதனைக்கு கர்நாடக காங்கிரஸ் அமைச்சர்கள், தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சதீஷ் ஜார்கிஹோளி மூத்த அமைச்சர். அவர் பல தொழில்கள் செய்கிறார். சமூக சேவையிலும் ஈடுபட்டுள்ளார். சட்ட வரம்புகளுக்கு உட்பட்டு தொழில் செய்கிறார். அமலாக்கத்துறை கேள்விகளுக்கு அவர் பதில் அளிப்பார். யாரும் பீதி அடைய வேண்டாம். சதீஷ் நேர்மையான அரசியல்வாதி. அவர் எந்த தவறும் செய்திருக்க மாட்டார்.
எனது தலைமையில் அரசு பதவியேற்று, நாளையுடன் 100 நாட்கள் ஆகிறது. அரசின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் நேரத்தில் இந்த சோதனை நடக்கிறது. இது அரசியல் உள்நோக்கம் கொண்டது.
பழங்குடியின தலைவராக சதீஷ் வளர்வதை, பா.ஜ.,வால் பொறுக்க முடியவில்லை. அவரை அரசியல்ரீதியாக முடக்க பார்க்கின்றனர். என்னையும் அமலாக்கத்துறை கைது செய்தது. நான் இப்போது மாநிலத்தின் முதல்வர்.
எஸ்.டி., சமூகத்தின் நாகேந்திராவை துன்புறுத்தினர். இப்போது சதீஷ் ஜார்கிஹோளி மீது குறிவைத்துள்ளனர். வரும் நாட்களில் பல அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் வீடுகளில் மத்திய விசாரணை அமைப்புகள் சோதனை நடத்த வாய்ப்பு உள்ளது. நாங்கள் யாரும் விசாரணைக்கு அஞ்சவில்லை.
சதீஷுக்கு 100க்கு 100 சதவீதம் ஆதரவாக இருப்போம். இந்தியாவில் இருந்தபடியே வெளிநாடுகளில் முதலீடு செய்வது தவறா... மத்திய அரசின் மோசமான மனப்பான்மையால், 12 லட்சம் தொழிலதிபர்கள் நாட்டில் இருந்து வெளியேறி உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதே நேரம் சதீஷ் வீட்டில் நடந்த சோதனையை, பா.ஜ., தலைவர்கள் நியாயப்படுத்தி உள்ளனர். 'தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும்' என்று கூறியுள்னர்.
சதீஷ் ஜார்கிஹோளியின் தம்பியும், சுயேச்சை எம்.எல்.சி.,யுமான லகன் ஜார்கிஹோளி கூறுகையில், ''அமலாக்கத்துறையினர் அவர்களுக்கு கிடைத்த தகவலின்படி எனது அண்ணன் வீடுகளில் சோதனை நடத்தி இருக்கலாம். அவர்கள் கேட்கும் கேள்விக்கு சதீஷால் பதில் கொடுக்க முடியும். அவர் நிறைய தொழில்கள் செய்கிறார். அதற்கு ஆவணம் அவரிடம் இருக்கும். உகாண்டாவில் சுரங்க நிறுவனம் மீது, பணம் முதலீடு செய்தாரா என எனக்கு எதுவும் தெரியாது,'' என்றார்.
கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ம் தேதி, இந்தியாவுக்கான ருவாண்டா நாட்டின் உயர் துாதர் ஜாகுலின் முகாங்கிரா தலைமையிலான குழுவினரை, பெலகாவியில் உள்ள சுவர்ண விதான் சவுதாவுக்கு, சதீஷ் ஜார்கிஹோளி அழைத்து வந்தார். விதான் சவுதாவை சுற்றி பார்த்த அந்த குழுவின், சதீஷ் ஜார்கிஹோளி நடத்தும் சர்க்கரை ஆலைகள், நட்சத்திர விடுதிகளையும் நேரில் சென்று பார்வையிட்டனர். தங்கள் நாட்டில் முதலீடு செய்யவும் அழைப்பு விடுத்து இருந்தனர்.
இந்த நிகழ்வு நடந்து சரியாக இரண்டு ஆண்டுகள் கழித்து, அதே செப்டம்பர் 9ம் தேதி, சதீஷ் ஜார்கிஹோளி வீடுகளில் சோதனை நடந்து இருப்பது கவனிக்கத்தக்கது.
