Politics
கட்சி மாறுகிறாரா ஜி.டி.தேவகவுடா?

மைசூரு: மைசூரு சாமுண்டீஸ்வரி சட்டசபை தொகுதி ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ஜி.டி.தேவகவுடா. கட்சியின் மூத்த தலைவர். கர்நாடகாவில் சித்தராமையா தலைமையில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், அக்கட்சியுடன் நெருக்கம் காட்ட துவங்கினார்.
அத்துடன் கட்சியின் கூட்டங்களில் பங்கேற்பதையும் படிப்படியாக குறைத்து கொண்டார். இதனால் மத்திய அமைச்சர் குமாரசாமி அதிருப்தி அடைந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன், மைசூரு வந்திருந்த குமாரசாமி, ஜி.டி.தேவகவுடாவின் வீட்டுக்கு செல்லாமல், அவரின் மகன் வீட்டுக்கு சென்றார். 'ஜி.டி.தேவகவுடா என்னால் தான் வெற்றி பெற்றார்' என்று கூறியிருந்தார்.
இதை, தவிடுபொடியாக்கும் வகையில் நேற்று மைசூரு கோட்டே ஆஞ்சநேய சுவாமி கோவிலில் இருந்து, ஜி.டி.தேவகவுடா தனது ஆதரவாளர்களுடன் திறந்த வேனில் பேரணியாக சென்றார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக ம.ஜ.த., கட்சி தலைவர்களால் நான் அவமதிக்கப்பட்டுள்ளேன். நான் அக்கட்சியின் எம்.எல்.ஏ., ஆனால் என்னை ஒரு நிகழ்ச்சிக்கு கூட அழைக்கவில்லை. கட்சி மாநாட்டிற்கு அழைக்காமல் அவமதித்து விட்டனர். எனது பலத்தை காட்ட ஆதரவாளர்கள் நடத்தும் பேரணி இது. மக்கள் என் மீது காட்டிய அன்பின் அடையாளம் தான் இந்த பேரணியின் வெற்றி.
சாமுண்டீஸ்வரி தொகுதி மக்களுக்கு கட்சி முக்கியமல்ல. அவர்களுக்கு நான் தான் முக்கியம். எனது மக்கள் எனக்கு ஆதரவு தருவர். சாகும் வரை மக்களுக்காக பணியாற்றுவேன். அடுத்த தேர்தலுக்கு முன், மக்களிடம் கருத்து கேட்டு அவர்கள் என்ன சொல்கின்றனரோ அதன்படி நடப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.