Politics
அஜித்குமார் காவல் மரணம்: திருப்புவனம் காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு; சிக்கியது எப்படி?
மறுநாள் அஜித்குமாரை தனிப்படையினர் 19 இடங்களுக்கு அழைத்துச் சென்று அடித்து சித்ரவதை செய்ததனாலேயே இறந்துள்ளார். உடனே அஜித்குமார் காவலில் இருந்து தப்பிக்க முயன்றபோது காயமடைந்து இறந்ததாக பொய்யான எப்.ஐ.ஆர் பதிவு செய்தது; காவல்நிலைய குறிப்பேட்டை மாற்றியமைத்ததுள்ளனர்.
"அஜித்குமாரை தனிப்படையினர் 19 இடங்களுக்கு அழைத்துச் சென்று அடித்துச் சித்ரவதை செய்ததனாலேயே இறந்துள்ளார். உடனே அஜித்குமார் காவலில் இருந்து தப்பிக்க முயன்றபோது காயமடைந்து இறந்ததாகப் பொய்யான எப்.ஐ.ஆர் பதிவு செய்தது; காவல்நிலையக் குறிப்பேட்டை மாற்றியமைத்ததுள்ளனர்"
சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தைச் சேர்ந்த காவலாளி அஜித்குமார் காவல் மரண கொலை வழக்கில் 6 பேரைக் கைது செய்துள்ள நிலையில், மானாமதுரை டி.எஸ்.பி-யாக இருந்த சண்முகசுந்தரம், திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார், போலீஸ்காரர் இளையராஜா ஆகியோர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்ய மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து வழக்கறிஞர்கள் நம்மிடம் பேசும்போது, "தற்போதுள்ள நால்வரின் பெயரையும் சி.பி.ஐ தன்னுடைய குற்றப் பத்திரிக்கையில் சேர்த்துள்ளது. அதில், அஜித்குமார் இறப்பதற்கு ஒரு நாள் முன்னதாக திருப்புவனம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லபட்டிருக்கிறார். காவல் நிலைய ஆய்வாளர் அவரைச் சரியாக விசாரிக்காமலும், காவல் நிலையத்திற்கு வந்தது பற்றி ஆவணங்களில் பதிவு செய்யாமல் இருந்துள்ளார்.
மறுநாள் அஜித்குமாரை தனிப்படையினர் 19 இடங்களுக்கு அழைத்துச் சென்று அடித்துச் சித்ரவதை செய்ததனாலேயே இறந்துள்ளார். உடனே அஜித்குமார் காவலில் இருந்து தப்பிக்க முயன்றபோது காயமடைந்து இறந்ததாகப் பொய்யான எப்.ஐ.ஆர் பதிவு செய்தது; காவல்நிலையக் குறிப்பேட்டை மாற்றியமைத்தது; நிகிதா அளித்த புகார் தொடர்பாகப் போடப்பட்ட சி.எஸ்.ஆரை மாற்றி, போலியான ஆவணங்களை உருவாக்கியுள்ளனர் எனத் தெரிவித்திருந்தனர்.
ஆனால் இவற்றையெல்லாம் கூறிய சிபிஐ இதற்கு குறைந்தபட்ச தண்டனை தான் கோரியிருந்தது. இதை மாவட்ட நீதிமன்றம் விசாரித்து கொண்டிருக்கும் போதே இந்த வழக்கிற்குத் தடை விதிக்க வேண்டுமென உயர்நீதிமன்றத்தில் நால்வரும் மனுதாக்கல் செய்தனர்.
அப்போது இந்தச் சம்பவங்களைக் குறிப்பிட்ட உயர்நீதிமன்ற நீதிபதி முருகன், 'காவல் நிலையத்தில் அமரவைக்கபட்டிருந்த அஜித்குமார் விருந்தாளியா, எம்.எல்.ஏ-வா? ஏன் அவர் வந்தது குறித்து பதிவு செய்யவில்லை? இந்தச் சம்பவங்கள் நடைபெறும்போது இன்ஸ்பெக்டரும், டி.எஸ்.பி-யும் 11 முறை பேசியிருக்கிறீர்கள்; அப்படி என்ன பேசினீர்கள்? டி.எஸ்.பி ஆகிய நீங்களே தனிப்படையைக் கண்காணிக்கவில்லை என்றால் யார் கண்காணிப்பது?' எனக் காத்திரமான கேள்விகளை எழுப்பியவர், தடை விதிக்க மறுத்துவிட்டார்.
இதன் தொடர்ச்சியாகவே மாவட்ட நீதிமன்றத்தில் நடந்துவந்த வழக்கில், அஜித்குமாரை அடித்தவர்கள் மட்டுமல்ல... அவரைத் தாக்கியதற்குத் தூண்டுதலாக இருந்தவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனச் சொல்லி, நான்கு பேர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டதோடு, 16 ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். இந்த விஷயம் வழக்கின் ஒரு திருப்பு முனையாக மாறியிருக்கிறது" என்றனர்.
அஜித்குமாரின் தம்பி நவீனிடம் பேசினோம். "எங்களிடமே டி.எஸ்.பி ஆரம்பத்தில் சமரசம் பேசினார். சிபிஐ அவருடைய பெயரையும் குற்றப்பத்திரிக்கையில் சேர்த்திருந்தது. தற்போது அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் தண்டனை பெற வேண்டும்" என்றார்.
இது குறித்து மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குநர் ஹென்றி திபேனிடன் பேசும்போது, ''வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் இது பற்றி இப்போது பேச முடியாது" என முடித்து கொண்டார்.
