சரணலாய கட்டமைப்பு குறித்து பழவேற்காடில் அமைச்சர் ஆய்வு
பழவேற்காடு: பழவேற்காடு சரணலாயத்தில் தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது குறித்தும், அதிகாரிகள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்தும், தமிழக வனத்துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதி பறவைகள் சரணாலயமாக உள்ளது. இங்கு, வெளிநாடுகளில் இருந்து பல்வேறு வகையான பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வந்து செல்கின்றன.
வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சரணலாயத்தின் தேவைகள் குறித்தும், வனத்துறையினர் சந்திக்கும் பிரச்னைகள் குறித்தும் தெரிந்து கொள்வதற்காக, நேற்று தமிழக வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் ஆய்வு மேற்கொண்டார். பொன்னேரி எம்.எல்.ஏ., ரவி மற்றும் வனத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
ஆய்விற்கு பின் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வனத்துறையில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்து வருகிறோம். பழவேற்காடு சரணாலய பகுதியில் அதிகளவிலான புள்ளிமான்கள் உயிரிழப்பது தொடர்பாக, அதிகாரிகளுடன் ஆலோசித்து, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தில் உள்ள பறவைகள் குறித்த புள்ளிவிபரங்கள் அரசிடம் உள்ளது. அதை கொண்டு தேவையான கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.