Arts, culture, entertainment and media
“சினிமாவில் வெற்றி கிடைப்பது ரொம்ப கஷ்டம், அதனால் அது வரும் போது...” - விஷ்ணு விஷால் பேச்சு

‘கட்டா குஸ்தி’ படத்தைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் கடந்த ஜூலை 3ஆம் தேதி வெளியானது. இப்படத்தை செல்லா அய்யாவு இயக்கியிருக்க விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி நாயகன், நாயகியாக நடித்திருந்தனர். கருணாஸ், காளி வெங்கட், முனீஷ்காந்த், கஜராஜ், கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனம் மற்றும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தது. ஷான் ரோல்டன் இசையமைத்திருந்த இப்படம் குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதையடுத்து வெற்றி விழா கொண்டாடப்பட்டது. அதில் நாயகன் விஷ்ணு விஷாலுக்கு பிஎம்டபள்யூ காரும் இயக்குநர் செல்லா அய்யாவுக்கு 10 கிராம் கோல்ட் செயின் மற்றும் பிரேஸ்லெட்டும், அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கு 40 கிராமில் வெள்ளி காசும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பரிசாக வழங்கியிருந்தார். இப்படம் தொடர்ந்து 50 நாட்களை கடந்து திரையரங்கில் ஓடியது. இதனையொட்டி தயாரிப்பு தரப்பில் 50நாள் வெற்றி விழா நடத்தியது. இதில் நடிகர்களுக்கு கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வினில் விஷ்ணு விஷால் கலந்து கொண்டு பேசுகையில், “நிறைய படத்துக்கு இந்த 50வது நாள் நடப்பது கிடையாது. ஆனால் நம்முடைய படத்துக்கு நடந்ததில் மகிழ்ச்சி. எல்லாருக்கும் நன்றி. முக்கியமா ஆடியன்ஸுக்கு. இன்னைக்கு அவங்க தான் வெற்றியை முடிவு பன்றவங்க. அவங்களுக்கு ஒரு படம் பிடிச்சிருச்சுன்னா அதை எந்தளவு கொண்டு போவாங்குறதுக்கு இந்த படம் ஒரு எக்ஸாம்பிள். ரம்யா கிருஷ்ணன் மேமிற்கு நன்றி. அவங்ககிட்ட 15 நிமிஷ ரோல்லுன்னு தான் சொன்னேன். எனக்காக நடிச்சு கொடுத்தாங்க. அவங்க இந்த படத்துல ஒரு பகுதியா இருந்தது மகிழ்ச்சி. சினிமாவுல வெற்றி கிடைப்பது கஷ்டம், அதனால அது கிடைக்கும் போது முடிஞ்சவரை அதை எவ்ளோ கொண்டாட முடியுமோ, கொண்டாடிடணும். அந்த விதத்துல ஐசரி கணேஷ் சார் இந்த பட வெற்றியை சிறப்பா கொண்டாடியிருக்கிறாரு” என்றார்.
பின்பு நிகழ்வில் கலந்து கொண்ட பிரபு தேவா பற்றி பேசினார். “அவர் எனக்கு ஒரு ஐடியல் போல. சின்ன வயசுல ‘சிக்கு புக்கு ரயிலே...’ பாட்டுக்கு எல்லா டான்ஸ் காம்பெடிஷன்லையும் கலந்துகிட்டு வின் பண்ணுவேன். எனக்கு டான்சர் ஆகனும்னு தான் ஆசை. ஆனா கால் அடிபட்டதால அதை கண்டினியூ பண்ண முடியல” என்றார். பிறகு இயக்குநர் குறித்து பேசிய அவர், “இயக்குநர் செல்லா ஒரு சிறந்த டைரக்டர். அவருடைய வெற்றி ரொம்ப ஆர்கானிக்கா இருக்கு. அது நிறைய நாள் நிலைச்சு நிக்கும்னு நினைக்குறேன். என்னுடைய கரியர்ல அதிக வருஷம் ஒரு டைரக்டரோட பயணிச்சிருக்கேன்னா அது செல்லாவோடு தான். அடுத்த வருஷம் அவரோடு சேர்ந்து கட்டா குஸ்தி 3 பண்ணுவேன்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)