நாய் கட்டுப்பாட்டு மையம், மாடுகள் பராமரிப்பு காப்பகம்: அமைச்சர் கமலி திறப்பு
பெருங்குடி: பெருங்குடி மண்டலத்தில் கட்டப்பட்டுள்ள இரண்டு மாடுகளை பராமரிக்கும் காப்பகம், நாய் இன கட்டுப்பாட்டு மையத்தை, அமைச்சர் கமலி, திறந்து வைத்தார்.
பெருங்குடி மண்டலம், மடிப்பாக்கம் பழைய குப்பைக் கிடங்கு வளாகத்தில், 1,003.52 சதுர மீட்டர் பரப்பளவில், 2.56 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மாடுகள் காப்பகம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்குள்ள நான்கு கூடங்களில் 100 மாடுகளை பராமரிக்க முடியும்.
தவிர, வீரபாண்டிய கட்டபொம்மன் தெருவில், 941 சதுர மீட்டர் பரப்பளவில், 2.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 120 மாடுகளை பராமரிக்கும் காப்பகம் கட்டப்பட்டுள்ளது.
இதன் அருகே 1.63 கோடி ரூபாய் செலவில் 563.37 சதுர மீட்டர் பரப்பளவில், ஒரே நாளில் 20 நாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்யும் அரங்கம், மருத்துவர் அறை, மருந்தகம் மற்றும் செல்ல பிராணிகளுக்கான சிகிச்சை கூடம், ஆகியவை கட்டப்பட்டு உள்ளது.
சென்னை மாநகராட்சியின் மூலதன நிதியின் கீழ் கட்டப்பட்ட இவற்றை, த.வெ.க.,வைச் சேர்ந்த அமைச்சர் கமலி திறந்து வைத்தார்.
போக்குவரத்திற்கு இடையூறாக திரியும் மாடுகள் மற்றும் தெருநாய்கள் குறித்து '1913' என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில், பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.