வங்கதேசத்தினர் 5 ஆயிரம் பேர் விசாக்களை ரத்து செய்தது யுஏஇ
- நமது நிருபர் -வங்கதேசத்தினர் 5 ஆயிரம் பேர் விசாக்களை ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) ரத்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய பதற்றமான சூழ்நிலை காரணமாக, ஐக்கிய அரபு அமீரகம் பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் விசா புதுப்பித்தல் மற்றும் ஆவணங்களில் ஏதேனும் சிறிய குளறுபடிகள் அல்லது முறைகேடுகள் இருந்தால் அவை உடனடியாக ரத்து செய்யப்படுகின்றன.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்கள் தங்களது சொந்த நாட்டின் உள்நாட்டு அரசியல் பிரச்னைகள் குறித்தோ அல்லது யுஏஇ பாதுகாப்புக்கு எதிராகவோ சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பகிர்வதை அந்நாட்டு அரசு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.
இத்தகைய விதிகளுக்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டவர்களின் விசாக்கள் தானாகவே ரத்து செய்யப்படும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 2026ம் ஆண்டின் துவக்கத்திலிருந்து வங்கதேசம் உட்பட 9 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்குப் புதிய சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்பு விசாக்களை வழங்குவதை ஐக்கிய அரபு அமீரகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்து உள்ளது. தற்போது வங்கதேசத்தினர் 5 ஆயிரம் பேர் விசாக்களை ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) ரத்து செய்துள்ளது.
விடுமுறையில் சென்றிருந்த தொழிலாளர்கள் மற்றும் வணிகர்களின் விசாக்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எந்தவித முன்னறிவிப்போ விளக்கமோ இன்றி திடீரென ரத்து செய்யப்பட்டதால், வங்கதேசத்தினர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்குத் திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். தற்போது வங்கதேசம் அரசு இந்த விவகாரத்தை ஐக்கிய அரபு அமீரக அரசிடம் தூதரக ரீதியாகக் கொண்டு சென்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு விசாக்களை மீண்டும் வழங்கக் கோரிக்கை விடுத்துள்ளது.
12 லட்சம் பேர்!
அவர்களில் பெரும்பாலானோர், விசாக்கள் மற்றும் வெளிநாட்டு வேலைகளுக்காக ஆள்சேர்ப்பு முகவர்களுக்குப் பணம் செலுத்த, பெரும் தொகையைக் கடனாகப் பெறுகிறார்கள். சொந்த ஊரில் உள்ள அவர்களது குடும்பங்கள், அவர்கள் அனுப்பும் பணத்தையே நம்பி வாழ்கின்றன.
வங்கதேசத்துக்கு வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பப்படும் மிகப்பெரிய ஆதாரமாகவும் ஐக்கிய அரபு அமீரகம் விளங்குகிறது. யுஏஇயில் இருந்து வங்கதேச தொழிலாளர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு அதிகமான பணத்தை அனுப்பி வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.