Politics
காதலியைத் தேடி கள்ளப்படகில் இலங்கை சென்ற சிறுவன் கைது; படகிற்கு கூலியாக தங்க மோதிரம்

ராமேஸ்வரம்: காதலியைத் தேடி கள்ளப்படகில் இலங்கை சென்ற சிறுவனை இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்தனர். படகில் சிறுவனை அழைத்து செல்ல தங்க மோதிரத்தை கூலியாக வாங்கிய படகோட்டியை போலீசார் தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் பிளஸ் 2 படிக்கிறார். இவர் யாழ்பாணத்தில் உள்ள தாய் வழி உறவினர் பெண்ணை சமூக வலைதளம் மூலம் காதலித்துள்ளார். மேலும் யாழ்ப்பாணத்தில் சிறுவனின் பாட்டி வசித்து வருகிறார்.
இந்நிலையில் சிறுவனின் காதல் தீவிரமடைந்து காதலியை சந்திக்க கள்ளப்படகில் இலங்கை செல்ல முடிவு செய்தார். நேற்று முன்தினம் இரவு ராமேஸ்வரம் சேரான்கோட்டை கடற்கரையில் இருந்து கள்ளத்தனமாக நாட்டுப்படகில் புறப்பட்டு சிறுவன் இலங்கை சென்றார்.
சிறுவனிடம் கூலியாக 4 கிராம் தங்க மோதிரத்தை வாங்கிய படகோட்டி சிறுவனை இலங்கை தலைமன்னார் அருகே மணல் தீடையில் இறக்கி விட்டு திரும்பினார். அங்கு ரோந்து சென்ற இலங்கை கடற்படை வீரர்கள் சிறுவனை கைது செய்து மன்னார் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின் சிறுவன் மீது போலீசார் வழக்கு பதிந்து யாழ்ப்பாணம் சிறுவர்கள் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.
படகோட்டி யார் சிறுவனிடம் கூலிக்கு தங்க மோதிரத்தை கழற்றிய ராமேஸ்வரம் படகோட்டி யார். இதற்கு முன்பு இந்த படகோட்டி இலங்கைக்கு சட்டவிரோத பொருட்களை கடத்தியிருப்பாரா என போலீசார் அவரை தேடி வருகின்றனர்.