விலை வீழ்ச்சியிலும் அறுவடை தீவிரம் :நஷ்டத்தை குறைக்க விவசாயிகள் முயற்சி

கோத்தகிரி: கேரட் விலை வீழ்ச்சி காரணமாக, கவலை அடைந்துள்ள விவசாயிகள், நஷ்டத்தை குறைக்க அறுவடையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
நீலகிரியில் தேயிலைக்கு அடுத்தப்படியாக, நீர் ஆதாரம் உள்ள விளை நிலங்களில், மலை காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில், நடப்பு போகத்தில், 1000 ஏக்கர் பரப்பளவில், கேரட் பயிரிட்டு விவசாயிகள் பராமரித்து வருகின்றனர்.
கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக, மழை பெய்யாத நிலையில், நீர் ஆதாரங்களில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. பெரும் சவாலுக்கு இடையே, விவசாயிகள் ஓடைகளை மறித்து, இரவு நேரத்தில் சிறுக, சிறுக சேகரமாகும் தண்ணீரை பயிருக்கு பாய்ச்சி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த, 10 நாட்களுக்கு முன்பு, ஒரு கிலோ கேரட்டுக்கு, 100 ரூபாய் வரை விலை கிடைத்தது. விவசாயிகள் ஓரளவு ஆறுதல் அடைந்தனர். தற்போது, ஒரு கிலோ கேரட்டுக்கு, 30 முதல், 35 ரூபாய் மட்டுமே விலை கிடைக்கிறது. இதனால், விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தற்போது, கோத்தகிரி பகுதியில், கூக்கல்தொரை, ஈளாடா, கதகு தொரை, வ.உ.சி., நகர் மற்றும் கட்டபெட்டு உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாரான கேரட் தோட்டத்திலேயே அழுகிவிடும் என்பதால், நஷ்டத்தை குறைக்க முதலீடு கிடைத்தால் போதும் என்ற நிலையில், அறுவடை செய்து, கேரட்டை கழுவி மண்டிகளுக்கு அனுப்பி வருகின்றனர்.