Economy, business and finance
நகை திருட்டு வழக்கில் பெண் கைது
அரியாங்குப்பம்: நகை திருட்டு வழக்கில் உடந்தையாக இருந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு கிராமத்தை சேர்ந்தவர் விஜயேந்திரன், 41. இவர், மும்பை துறைமுகத்தில் கப்பலில் பணி செய்து வருகிறார். கடந்த 10ம் தேதி இவரது வீட்டில் 35 சவரன் தங்க நகை மற்றும் 1.5 லட்சம் ரூபாய் ரொக்கம் திருடு போனது.
புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, நல்லவாடு பகுதியை சேர்ந்த மீனவர் அன்பரசன்,33; என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து, 30 சவரன் நகைகளை மீட்டனர்.
மேலும், அன்பரசன் திருடிய நகைகளை அதே பகுதியை சேர்ந்த மாலதி, 44, என்பவரிடம் கொடுத்து பணம் வாங்கியதாக கூறியதை அடுத்து, அவரை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் நல்லவாடு கிராமத்திற்கு வந்த மாலதியை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, 1 லட்சம் ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்து, புதுச்சேரி கோர்டில் நேற்று ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.