தறிகெட்டு ஓடி கவிழ்ந்த கார் ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே, சுண்ணாம்புகுளம் பஜார் பகுதியில், தறிகெட்டு ஓடிய கார், சாலையோர கடைகள் மற்றும் வாகனங்கள் மீது மோதி கவிழ்ந்தது. கார் மோதியதில், ஒருவர் உயிரிழந்தார்; நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளம் பஜார் பகுதியில், நேற்று மாலை, மஹாராஸ்டிரா மாநில பதிவு எண் கொண்ட கார், 200 மீட்டர் துாரத்திற்கு தறிகெட்டு ஓடியது. சாலையோர கடைகள் மற்றும் ஐந்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது, அடுத்தடுத்து மோதி சாலையில் கவிழ்ந்தது.
கார் மோதியதில், பைக்கில் சென்ற ராக்கம்பாளையம் கிராமத்தை சேர்ந்த மாசிலாமணி, 58, என்பவர், சம்பவ இடத்திலேயே பலியானார்; நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். ஆம்புலன்ஸ் மூலம், அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
காரில் பயணித்த ஐந்து பேரும், மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களை, கிராம மக்கள் சூழ்ந்து, தர்ம அடி கொடுத்தனர். படுகாயம் அடைந்த ஐந்து பேரையும் போலீசார் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவரின் உடலை கைப்பற்ற முயன்ற போலீசாருக்கும், கிராம மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பதற்றமான சூழல் நிலவியதால், போலீசார் அனைவரையும் சமாதானம் செய்தனர்.
உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தால், சுண்ணாம்புகுளம் கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து, ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.