டேப்ஸ் இடைக்கால நிவாரணம்; உள்ளாட்சி பணியாளருக்கு இல்லை
சென்னை; 'டேப்ஸ்' எனப்படும் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில், இடைக்கால நிவாரணத் தொகை வழங்குவது தொடர்பாக, மாநில கருவூல கணக்குத் துறை இயக்குநருக்கு நிதித்துறை செயலர் எம்.ஏ.சித்திக் அனுப்பியுள்ள கடிதம்:
சிறப்பு காலமுறை ஊதியத்தில் இருந்து, அதன் பின்னர் காலமுறை ஊதியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றோருக்கு, இடைக்கால நிவாரணத் தொகை கணக்கிடும்போது, காலமுறை ஊதிய காலமே தகுதியான பணிக் காலமாக கருதப்பட வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றிய காலத்தை சேர்க்கக் கூடாது.
டேப்ஸ் இடைக்கால நிவாரணத் தொகை, சி.பி.எஸ்., திட்டத்தில் பணியாற்றி, கடந்த ஜனவரி 1-ம் தேதிக்கு பின் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மட்டுமே பொருந்தும். அவர்களை தவிர்த்து, பிற பணியாளர்களான உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள், கழகங்கள் மற்றும் பல்கலை பணியாளர் களுக்குப் பொருந்தாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஓய்வுபெற்ற அரசு பணியாளர்களுக்கு, ஓய்வூதிய பலன்கள் மொத்தமாக வழங்க தாமதமானால், அவர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க, 'டேப்ஸ்' வழிவகை செய்துள்ளது. ஆனால், அது உள்ளாட்சி, வாரியங்கள், கழகங்கள், பல்கலைகளில் பணியாற்றிய பணியாளர்களுக்கு பொருந்தாது என, நிதித் துறை கூறி உள்ளதால், அந்த பணியாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.