கோயில் முக்கிய நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்யும் யூடியூப் சேனல்கள் மீது வழக்கு; அறநிலையத்துறை எச்சரிக்கை*

மதுரை: கோயில்களில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகளை அனுமதியின்றி நேரடி ஒளிபரப்பு செய்யும் யூடியூப் சேனல்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மீனாட்சி கோயில் சித்திரைத்திருவிழா, பழநி கந்தசஷ்டி விழா, சில முக்கிய கோயில்களின் சிறப்பு நிகழ்வுகள், கும்பாபிஷேகம் போன்றவற்றை சேட்டிலைட் சேனல்கள் அறநிலையத்துறையின் அனுமதி பெற்று நேரடி ஒளிபரப்பு செய்து வருகின்றன.
இந்நிலையில் சில ஆன்மிக யூடியூப் சேனல்கள் தினமும் முக்கிய கோயில்களின் சுவாமி அலங்காரம், அபிஷேக நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்து வருகின்றன. ஆனால் இதற்கு கோயில் நிர்வாகம் அல்லது அறநிலையத்துறையின் அனுமதி பெறவில்லை எனத் தெரியவந்துள்ளது.
இதைதொடர்ந்து கோயில் செயல் அலுவலர்களுக்கு அறநிலையத்துறை கமிஷனர் வினய், சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், எந்தெந்த யூடியூப் சேனல்கள் அனுமதி பெறாமல் கோயில் நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்கிறார்கள் என்பதை கண்டறிந்து செப்.,15க்குள் சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.