ஒரு மணி நேரத்திற்கு இத்தனை முறையா? பிரசவத்தின் பெயரால் அரங்கேறிய கொடூரம்-குமுறும் கர்ப்பிணி

திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு, அங்குள்ள தற்காலிக மற்றும் கீழ்நிலை மருத்துவப் பணியாளர்களால் கடுமையான உடல் மற்றும் மன ரீதியான சித்திரவதைகள் நிகழ்ந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்களில் ஒருவர், தான் ஒரு 'ஸ்டாஃப் நர்ஸ்' என்று அடையாளப்படுத்திக் கொண்டு, அங்குள்ள பணியாளர்களின் செயல்களை ஆத்திரத்துடன் போட்டுடைத்துள்ளார் "ஒரு கர்ப்பிணிப் பெண்ணிற்கு ஒரு மணி நேரத்திற்கு எத்தனை முறை 'உள் பரிசோதனை'செய்ய வேண்டும் என்ற எந்தவொரு அடிப்படை மருத்துவ அறிவு கூட இல்லாத பொறுப்பற்ற பணியாளர்கள் இங்கு நியமிக்கப்பட்டுள்ளனர். பிவி டெஸ்ட் செய்கிறோம் என்ற பெயரில், எந்தவொரு தகுதியும் இல்லாதவர்கள் அடிக்கடி வெறும் கைகளால் அந்தப் பகுதியைத் தாக்கியதால், எனக்கு அந்த இடமே ரணமாகிப் புண்ணாகிவிட்டது.
இந்தச் சித்திரவதையைத் தாங்க முடியாமல், எனக்குச் சுகப் பிரசவமே வேண்டாம், தயவுசெய்து அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுத்துவிடுங்கள் என்று அழுது கெஞ்சும் நிலைக்கு நான் தள்ளப்பட்டேன்" என்று கண்ணீருடன் விவரித்துள்ளார்.
''வலி வந்துவிட்டது, பனிக்குடம் உடைந்துவிட்டது என்று கதறியபோதும், அங்குள்ள நர்ஸுகள் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தங்களின் சொந்த வீட்டுச் சமையல் கதைகளையும், பிரியாணி செய்யும் முறைகளையும் அரட்டையடித்துக் கொண்டு பராக்கு பார்த்துக் கொண்டிருந்தனர். குழந்தையின் தலை பாதியளவு வெளியே வந்த பின்னர்தான், பதறிப்போய் அந்தப் பெண்ணைப் பிரசவ வார்டுக்குள்ளேயே தூக்கிக் கொண்டு ஓடினார்கள். மருத்துவமனைக்கு வரும் ஏழைகளை அசிங்கமாகத் திட்டுவதற்கும், தங்களுக்குள் கதை பேசுவதற்கும் மட்டும்தான் இந்த மருத்துவமனை இருக்கிறதா?" என்று உறவினர்கள் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்தக் கொடூரச் சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் எட்வின் வசந்தாவிளக்கம் அளித்துள்ளார். "எங்கள் பிரசவ வார்டில் 8 படுக்கைகள் மட்டுமே உள்ளன, ஆனால் ஒரு நாளைக்கு 35 முதல் 40 பிரசவங்கள் வரை நடப்பதால் இடநெருக்கடி ஏற்படுகிறது. இந்த விவகாரம் குறித்து முழுமையாக விசாரித்துத் தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதியளித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)