ஆசிரியர் வீட்டுவசதி அறக்கட்டளைக்கு ‘வாரண்ட்’ பிறப்பிக்க ஆணையம் உத்தரவு
சென்னை: வீட்டு மனை கிடைக்காதவருக்கு பணத்தை திருப்பி தராத, ஆசிரியர் வீட்டுவசதி அறக்கட்டளைக்கு, ‘வாரண்ட்’ பிறப்பிக்க, ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக ஆசிரியர் வீட்டுவசதி நல அறக்கட்டளை சார்பில், தாம்பரம் அடுத்த படப்பையில் வீட்டு மனை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதில், வீட்டு மனை வாங்க, கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் தலா, 12 லட்சம் ரூபாய் செலுத்தினர். இவர்களுக்கு, குறிப்பிட்ட காலத்தில் வீட்டு மனை வழங்கப்படவில்லை.
இதுகுறித்து, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில், கிருஷ்ணகுமார் புகார் செய்தார். இதை விசாரித்த ஆணையம், மனுதாரர் செலுத்திய தொகையை திருப்பிக் கொடுக்க, 2023ல் உத்தரவிட்டது.
ஆனால், ஆசிரியர் வீட்டுவசதி நல அறக்கட்டளை உத்தரவை செயல்படுத்தவில்லை. இது குறித்து கிருஷ்ணகுமார் ரியல் எஸ்டேட் ஆணையத்தில் மீண்டும் முறையிட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக, ரியல் எஸ்டேட் ஆணைய தலைவர் பணிந்திர ரெட்டி தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கில் ஆணையம், 2023ல் பிறப்பித்த உத்தரவை ஆசிரியர் வீட்டுவசதி நல அறக்கட்டளை நிறைவேற்றவில்லை. எனவே, மனுதாரருக்கு வர வேண்டிய, 12 லட்சம் ரூபாயை வருவாய் மீட்பு சட்டத்தின் அடிப்படையில், வாரண்ட் பிறப்பித்து வசூலிக்கலாம். கலெக்டர் இதற்கான நடவடிக்கையை எடுக்கலாம்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.