மலையில் மழை வேண்டி கூட்டு பிரார்த்தனை நேபாள பேரிடர் பாதிப்புக்கு இரங்கல்
கோத்தகிரி: கோத்தகிரியில், சிற்பிகள் நலசங்கம் சார்பில், நேபாள பேரிடரில் பாதிக்கப்பட்டு இறந்த மக்களுக்கு இரங்கல், தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள மழை வேண்டி கூட்டு பிரார்த்தனை நடந்தது.
நிகழ்ச்சியில், சிற்பிகள் நலச்சங்க துணை தலைவர் சகோதரி லல்லி வரவேற்றார்.
தலைவர் தாஜ்தீன் தலைமை வகித்தார். செயலாளர் ராஜ்குமார், பங்குதந்தை அமிர்தராஜ் மற்றும் சதாம் உசேன், பிரம்ம வித்யா கேந்திர நிறுவனர் பிரியானந்த சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக எம்.எல்.ஏ.,கள் போஜராஜன் மற்றும் ராஜூ ஆகியோர் பங்கேற்று பேசினர்.
நிகழ்ச்சியில், ‘இயற்கை பேரிடரால் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும், ‘பாதிக்கப்பட்ட நேபாள நாட்டு மக்கள் மன வலிமை பெறவும், உறவுகளை இழந்த மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், மீட்பு மற்றும் நிவாரண பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் இறைவன் வலிமை அளிக்கவும், மழை பெய்து விவசாயம் செழித்து, மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் தண்ணீர் கிடைக்க வேண்டும்,’ என, கூட்டு பிரார்த்தனை செய்யப்பட்டது. தொழிலதிபர் ராஜேஷ் மற்றும் அரசியல் கட்சியினர், வியாபாரிகள், டிரைவர்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.