Politics
ராஜஸ்தான் உள்ளாட்சி தேர்தல் 5 மாநகராட்சிகளை வென்றது பா.ஜ.,
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்தமுள்ள, 10 மாநகராட்சிகளில், ஐந்து மாநகராட்சிகளை பா.ஜ., வென்றுள்ளது. எதிர்க்கட்சியான காங்., ஒரேயொரு மாநகராட்சியை மட்டும் கைப்பற்றி உள்ளது.
ராஜஸ்தானில் முதல்வர் பஜன் லால் சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள 10 மாநகராட்சிகள், 252 நகராட்சிகள், 47 நகராட்சி கவுன்சில்களுக்கு சமீபத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதன் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.
அதன்படி, 10 மாநகராட்சிகளில், 5ல் பா.ஜ., வென்றுள்ளது. உதய்பூர், பில்வாரா, கோட்டா, ஜெய்ப்பூர், அல்வார் ஆகிய மாநகராட்சிகளை அக்கட்சி வென்றது. பிகானீர் மாநகராட்சியை காங்., வென்ற நிலையில், அஜ்மீர், பாலி ஆகிய மாநகராட்சிகளில் முன்னிலையில் உள்ளது.
மொத்தமுள்ள, 252 நகராட்சிகளில், 144ஐ பா.ஜ., வென்ற நிலையில், காங்., 92ஐ கைப்பற்றியது. 16 நகராட்சிகளை சுயேச்சைகள் கைப்பற்றி உள்ளனர். 47 நகராட்சி கவுன்சில்களில், பா.ஜ., 21; காங்., 17; சுயேச்சைகள் ஒன்பது கவுன்சில்களை கைப்பற்றினர்.
மொத்தம், 10,244 வார்டுகளுக்கு தேர்தல் நடந்தது. இதில், 10,210 வார்டுகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பா.ஜ., – 4,171; காங்., – 3,597; சுயேச்சைகள் 2,272 வார்டுகளை வென்றுள்ளன.
வரும் 2028ல் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இந்த உள்ளாட்சி தேர்தல் ஆளும் பா.ஜ., அரசுக்கும், எதிர்க்கட்சியான காங்கிரசுக்கும் முக்கிய பலப்பரீட்சையாக பார்க்கப்படுகிறது.