கோதையாற்றில் முதலை நடமாட்டம் பீதி கிளப்புபவர்கள் மீது நடவடிக்கை
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவி அருகே கோதையாற்றில் முதலை நடமாட்டம் குறித்து பீதி கிளப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரித்துள்ளது.
திற்பரப்பு அருவியின் மேற்பகுதியில் அமைந்துள்ள கோதையாற்றில் ஒரு முதலை நடமாடி வருகிறது. இதை பிடிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் அது வலையில் சிக்காமல் தப்பி வருகிறது.
இதற்காக சென்னையில் இருந்து நிபுணர் குழுவினரும் வந்து பலமுறை ஆய்வு நடத்தி சென்றுள்ளனர். வனத்துறை ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதற்கிடையில் சில நாட்களுக்கு முன் கோதையாற்றில் மீண்டும் முதலை நடமாடுவதாக படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
அதை வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்த போது அது வேறு எங்கோ எடுக்கப்பட்ட படம் என்பது தெரியவந்தது.
முதலையை பிடிக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இதுகுறித்து வதந்தி பரப்பி பீதியை கிளப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வனத்துறை எச்சரித்துள்ளது.