லண்டன் புறப்பட்ட விமானத்தில் கோளாறு; பெங்களூருவில் அவசர தரையிறக்கம்

பெங்களூரு: லண்டன் புறப்பட்ட விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், அவசர அவசரமாக பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில், 270 பயணிகளுடன் விர்ஜின் அட்லாண்டிக் நிறுவன விமானம், இன்று காலை 8.20 மணியளவில் லண்டன் நோக்கி புறப்பட்டுச் சென்றது. கிளம்பிய சில நிமிடங்களிலேயே விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனை உணர்ந்த விமானி, உடனடியாக பெங்களூரு விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.
அதன்பேரில், தும்கூர் அருகே அரை மணி நேரத்திற்கும் மேலாக வட்டமடித்துவிட்டு, பின்னர் மீண்டும் விமானம் பெங்களூருவுக்கு திரும்பியதும், பத்திரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், தொழில்நுட்பக் கோளாறு குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
