Politics
புதிய தலைமை செயலகம்: `ஜல்லிக்கட்டு போராட்டத்தை விட மிகப்பெரிய போராட்டத்தை..!'- கொதிக்கும் மீனவர்கள்
நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது, 110-வது விதியின் கீழ் ரூ.1,200 கோடி மதிப்பில் 20 ஏக்கர் பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என தமிழக முதல்வர் விஜய் அறிவித்தார்| Fishermen’s association warns the TVK government for new secretariat in pattinapakam

புதிய தலைமைச் செயலகக் கட்டடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தங்களது படகுகளில் கறுப்புக் கொடிகளைக் கட்டி தவெக அரசின் முயற்சிக்கு மீனவர்கள் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.
நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது, 110-வது விதியின் கீழ் ரூ.1,200 கோடி மதிப்பில் 20 ஏக்கர் பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என தமிழக முதல்வர் விஜய் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காக சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் 25 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு அப்பகுதியில் வசிக்கும் மீனவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கு 9 மீனவ கிராமங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
புதிய தலைமைச் செயலகக் கட்டடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தங்களது படகுகளில் கறுப்புக் கொடிகளைக் கட்டி தவெக அரசின் முயற்சிக்குத் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.
மேலும் இந்த விவகாரம் முதல்வர் விஜய்க்கு மிகப்பெரிய அரசியல் சவாலாக மாறியுள்ள நிலையில், 9 கிராமங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் நேற்று (செப்.15) பட்டினம்பாக்கத்தில் மாபெரும் ஆலோசனைக் கூட்டத்தையும் நடத்தி இருந்தனர்.
இதில் கலந்துகொண்ட தமிழ்நாடு மீனவர் மக்கள் சங்கத் தலைவர் ஜெ.கோசுமணியைத் தொடர்புகொண்டு பேசினோம். நம்மிடம் பேசிய அவர், "1,200 கோடி ரூபாய் செலவில் புதிய தலைமைச் செயலகத்தை பட்டினப்பாக்கத்தில் அமைப்பதற்காகச் சில முயற்சிகளை முதல்வர் விஜய்யின் தவெக அரசு மேற்கொண்டு வருகிறது.
இது முழுக்க முழுக்க மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், வாழ்வுரிமையையும், மீன்பிடி உரிமையையும் முற்றிலுமாகப் பாதிக்கக்கூடிய ஒரு திட்டம்.
இப்பகுதி மிகவும் குறுகிய ஒரு பகுதி. இத்திட்டம் அமல்படுத்தப்படும் பட்டினப்பாக்கம் பகுதியின் சர்வே எண்களான 4592 மற்றும் 4593 ஆகியவை முள்ளிக்குப்பம், முள்ளிமா நகர் ஆகிய மீனவ கிராம மக்களின் பட்டா நிலங்களாகும்.
போக்குவரத்து நெரிசல்...
சாந்தோம் ரோடு, லூப் ரோடு ஆகிய இரு குறுகிய சாலைகள் மட்டுமே உள்ள இப்பகுதியில் ஏற்கெனவே 15க்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்கி வருவதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.
இந்தச் சூழலில் தலைமைச் செயலகம் அமைந்தால் போக்குவரத்து பாதிப்பு மேலும் தீவிரமடையும். இந்தியாவில் 'டெக்னாலஜி ஃபிஷிங்' இல்லாததால், மீனவர்களாகிய நாங்கள் கடலையும் காற்றினுடைய திசையையும் நேரடியாகக் கணித்தே மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம்.
கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி கிடைக்காது!
கடற்கரையில் தங்கி தொழில் உபகரணங்களை வைத்துப் பராமரித்து வரும் எங்களுக்கு, இப்பகுதியில் தலைமைச் செயலகம் அமைவது வாழ்வாதாரத்தைப் பெருமளவில் பாதிக்கும். மேலும், கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின்படி இங்கு கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி கிடைக்காது.
முதலமைச்சருக்குப் புரியவில்லை!
எனவே, அரசு இத்திட்டத்திற்கு மாற்றாக ECR பாதையில் உள்ள திருவிடந்தை அல்லது பனையூர், அக்கரை போன்ற சென்னைக்கு வெளியே உள்ள பகுதிகளைத் தேர்வு செய்யலாம்.
இத்திட்டம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என அனைவருக்கும் புரிகிறது. ஆனால் முதலமைச்சருக்குப் புரியவில்லை என்றால், அவருக்கு அரசியல் பார்வையோ நிர்வாகப் பார்வையோ உள்ளதா என்ற கேள்வி எழுகிறது.
அரசாணையை அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்
நொச்சிக்குப்பம் முதல் சீனிவாசபுரம் வரையிலான பகுதியை 'மீன்பிடி பாதுகாப்பு மண்டலமாக' அறிவிக்க வேண்டும் என்றும், புதிய தலைமைச் செயலகத்திற்கான அரசாணையை அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் கோருகிறோம்.
திரும்பப் பெறவில்லை என்றால், 56 மீனவ கிராமங்களை ஒன்றிணைத்து ஜல்லிக்கட்டு போராட்டத்தை விட மிகப்பெரிய அளவிலான வீரியமிக்க போராட்டத்தை முன்னெடுப்போம்" என்றார்.
