Politics
10 ஆண்டில் 50 ஆயிரம் கழிப்பறைகளை கூட காங்., கட்டவில்லை: குஜராத்தில் பிரதமர் மோடி சாடல்
வதோதரா: ''மத்தியில், 2014ல் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த பின், 50 ஆயிரம் ரயில் பெட்டிகளை உருவாக்கி உள்ளது. ஆனால், 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்., 50 ஆயிரம் கழிப்பறைகளை கூட கட்டவில்லை,'' என, பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினார்.
குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள வதோதரா மாவட்டத்துக்கு நேற்று வந்த பிரதமர் மோடி, அங்கு நடந்த நிகழ்ச்சியில், 35,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைத்தார். இதில், 2,800 கி.மீ., நீளமுள்ள மேற்கு, கிழக்கு பிரத்யேக சரக்கு ரயில் போக்குவரத்து வழித்தட திட்டமும் அடங்கும்.
தொடர்ந்து, பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
நாங்கள் ஆட்சிக்கு வந்த பின், நாட்டின் வளர்ச்சி வேகத்தை துரிதப்படுத்தினோம். 2014க்கு பின், 50 ஆயிரம் நவீன ரயில் பெட்டிகளை என் தலைமையிலான அரசு தயாரித்துள்ளது. ஆனால், 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருந்த காங்., 50 ஆயிரம் கழிப்பறைகளை கூட கட்டவில்லை. மக்களுக்கு பணி செய்யாமல் ஒரு குடும்பத்துக்காகவே காங்., தலைவர்கள் உழைத்து கொண்டிருந்தனர் என்பதை நாடறியும்.
நாட்டின் உற்பத்தித் திறனின் முக்கிய அடையாளமாக வதோதரா உருவெடுத்து வருகிறது. நாட்டின் முதல், 'மேக் இன் இந்தியா' விமானத்தை தயாரித்து தேசிய அளவில் வதோதரா நற்பெயரை பெற்றுள்ளது. ரயில் பெட்டிகள், மெட்ரோ ரயில் பெட்டிகள், ரயில் இன்ஜின்கள் உற்பத்தியில் நம் நாடு விரைவான வளர்ச்சியை கண்டு வருகிறது.
இன்று, 2,800 கி.மீ., நீளமுள்ள சரக்கு போக்குவரத்துக்கான பிரத்யேக ரயில் வழித்தடம் நிறைவடைந்து உள்ளது. 12 ஆண்டுகளில், நாட்டின் பணி கலாசாரம் எவ்வாறு மாறியுள்ளது என்பதற்கு இதுவே சாட்சி.
இந்த சரக்கு ரயில் போக்குவரத்து திட்டம், காங்., ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டிருந்தது. 2014ல் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், இந்த திட்டத்தை விரைவுபடுத்தினோம். முன்பெல்லாம், பயணியர் ரயில்களும், சரக்கு ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் இயங்கியதால், இரண்டுமே தாமதமடைந்தன. சரக்கு ரயில் போக்குவரத்து பிரத்யேக வழித்தடங்கள் அமைக்கப்பட்ட பின் நிலைமை மாற்றியுள்ளன. இந்த வழித்தடங்கள் வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவின் உயிர்நாடியாக உள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
