பழநி கோயில் சிவன் சன்னதிகளில் வெள்ளி தகடுகள் பதிக்கும் பணி சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் உட்பிரகார மகா மண்டபத்தில் உள்ள சிவன் சன்னதிகளுக்கு வெள்ளி தகடுகள் பதிக்கும் பணி நேற்று சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது.
இக்கோயில் உட்பிரகார மகா மண்டபத்தில் நுழைவாயிலின் இருபுறமும் 2 சிவன் சன்னதிகள் உள்ளன.
இச்சன்னதிகளுக்கு வெள்ளி தகடுகள் பொருத்த திட்டமிட்டு உபயதாரர்கள் மூலம் 89 கிலோவில் வெள்ளி தகடுகள் செய்ய ஹிந்து சமய அறநிலையத்துறை அனுமதி வழங்கியது.
தொடர்ந்து 'நகாஸ்' வேலைப்பாடுகளுடன் வெள்ளி தகடுகள் தயார் செய்யப்பட்ட நிலையில் சிவன் சன்னதிகளில் பொருத்தும் பணிகள் நேற்று துவங்கியது.
இதற்காக கோயில் வளாகத்தில் நடந்த சிறப்பு பூஜையில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியன், இணை கமிஷனர் வெங்கடேஷ், திண்டுக்கல் ஹிந்து சமய அறநிலையத்துறை சரிபார்ப்பு அலுவலர் அன்னக்கொடி, கோயில் கண்காணிப்பாளர்கள், அலுவலர்கள், பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.
இப்பூஜைக்கு பிறகு சன்னதிகளில் வெள்ளி தகடு பொருத்தும் பணிகள் துவங்கியது. இப்பணிகள் தொடர்ந்து 5 நாட்கள் நடக்கும் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.