மனைவி, குழந்தைகளை செங்கலால் அடித்து கொன்ற கணவன் ஓட்டம்: தேடுகிறது போலீஸ்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் மனைவி,3 குழந்தைகளை செங்கலால் அடித்துக் கொன்று விட்டு தலைமறைவான கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரின் கோவிந்தபுரா பகுதியில் வசித்து வருபவர் ராகுல் ஜா. இவரது மனைவி கீதா ஜா(40). இவர்களுக்கு நந்தினி, கிரிஷா மற்றும் ராதிகா என்ற பெண் குழந்தைகள் 3 பேர் உள்ளனர். அவர்களுக்கு 17 முதல் 23 வயதாகிறது.
இன்று காலை 10 மணி வரையிலும் அவர்களது வீட்டு கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தனர். அப்போது கீதாஜா,நந்தினி, கிரிஷா மற்றும் ராதிகா ஆகியோர் செங்கலால் அடித்து கொல்லப்பட்டது தெரியவந்தது. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
இந்த கொலையை செய்தது ராகுல் ஜா என்பதும், அவர் தலைமறைவாக உள்ளதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலைக்கான காரணம் தெரியவில்லை. குடும்ப தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் எனவும், அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த போது கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். தலைமறைவான ராகுல்ஜாவை போலீசார் தேடி வருகின்றனர்.