Arts, culture, entertainment and media
விபத்தில் நிரந்தர பார்வை பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ரூ.21.50 லட்சம் இழப்பீடு
சென்னை, செப். 17-– சாலை விபத்தில், 19 வயது சிறுவனுக்கு நிரந்தர பார்வைக் குறைபாடு ஏற்பட்டதாக தொடர்ந்த வழக்கில்,
சாலை விபத்தில், 19 வயது சிறுவனுக்கு நிரந்தர பார்வைக் குறைபாடு ஏற்பட்டதாக தொடர்ந்த வழக்கில், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு, 21.50 லட்சம் ரூபாய் இழப்பீட்டை யுனைடெட் இந்தியா நிறுவனம் வழங்க, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், எர்ணாவூரை சேர்ந்த, 19 வயது சிறுவன் விஷால். இவர், 2025 மார்ச் 21ம் தேதி, இரவு 9:45 மணியளவில், இருசக்கர வாகனத்தில் எண்ணுார் பாலம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிர் திசையில் வந்த மற்றொரு இருசக்கர வாகனம், விஷாலின் வாகனம் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த விஷால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விஷாலை பரிசோதித்த மருத்துவக் குழு, சிறுவனுக்கு 40 சதவீத நிரந்தரப் பார்வை குறைபாடும், 23 சதவீத பல் சார்ந்த குறைபாடும் ஏற்பட்டுள்ளதாக சான்றளித்தது.
இதையடுத்து, 30 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயத்தில், விஷால் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி, எம்.தர்மபிரபு முன் விசாரணைக்கு வந்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘‘விபத்தில் சிறுவனுக்கு ஏற்பட்ட 40 சதவீத நிரந்தர பார்வை குறைபாடு மற்றும் சிறுவனது வயதை கருத்தில் கொண்டு, 21.50 லட்சம் இழப்பீட்டை, யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம், 30 நாட்களுக்குள் சிறுவனுக்கு வழங்க வேண்டும்,’’ என, உத்தரவிட்டார்.