Politics
'அனிதா நினைவேந்தலுக்குத் தடையா? தூய்மைப் பணியாளர்களை தவிக்கவிடும் விஜய்'-இள.புகழேந்தி காட்டம்

மக்கள் தங்களின் வாழ்வாதார உரிமைக்காகப் போராடும் போது அவர்களைச் சந்திக்க மறுப்பதும், மாணவர்களின் உணர்வுகளை மதிக்காமல் இருப்பதும் தற்போதைய அரசின் வழக்கமாகிவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துவரும் நிலையில் இது குறித்து நக்கீரன் டிவிக்கு திமுகவின் தேர்தல் பணிக்குழு செயலாளர் இள.புகழேந்தி கொடுத்த சிறப்பு நேர்காணலில் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறுகையில், "தேர்தலுக்கு முன்பு ஏழை எளிய முதியவர்களையும், பெண்களையும் நேரில் சென்று கட்டிப்பிடித்து, பாச மழை பொழிவது போலப் போஸ் கொடுத்து ஓட்டுகளை வாங்கியவர்தான் இந்த நடிகர் விஜய். ஆனால், இன்றைக்குத் தங்களின் ஊதிய உயர்வு, மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளுக்காகத் தூய்மைப் பணியாளர்கள் பல நாட்களாகப் போராடி, முதலமைச்சரை நேரில் சந்திக்கக் கோட்டை நோக்கிப் பேரணியாகப் போகிறார்கள். ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்கி அந்த உழைக்கும் மக்களை இறங்கிச் சந்தித்துப் பேசினால் இவருடைய முதலமைச்சர் பதவி குறைந்துவிடுமா?
மு.க.ஸ்டாலின் எத்தனையோ முறை தொழிலாளர்களையும், தூய்மைப் பணியாளர்களையும் நடுவீதியில் கூட இறங்கிச் சந்தித்து அவர்களின் மனுக்களைப் பெற்றுள்ளார். சினிமாப் படத்தில் ஏழைகளோடு டான்ஸ் ஆடி குதிக்கும் விஜய், நிஜ வாழ்க்கையில் தூய்மைப் பணியாளர்களை மதிக்காமல் தனது போலி வேடத்தைக் கலைத்து சுயரூபத்தைக் காட்டியுள்ளார் .அதைவிடக் கொடுமை என்னவென்றால், நீட் தேர்வினால் தனது மருத்துவக் கனவு சிதைந்து தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் 9-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு இந்த அரசு அனுமதி மறுத்துத் தடை விதிக்கிறது.
மேடையில் பேசும்போது அனிதா என் தங்கை போன்றவர் என்று கண்ணீர் வடித்த விஜய், இன்றைக்குத் தனது தங்கையின் நினைவேந்தலுக்குத் தடை போடுவதுதான் பாசமா? பெசன் நகர் சர்ச் திருவிழா நடப்பதால் கூட்டம் அதிகமாகும் என்று இவர்களது கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆதவ் அர்ஜுனா ஒரு அப்பட்டமான பொய்யைக் கூறி முட்டுக்கொடுக்கிறார். ஆனால், எங்களது இளைஞரணிச் செயலாளர் தம்பி உதயா, 'சர்ச் கொடியேற்றத் திருவிழா கடந்த வாரமே முடிந்துவிட்டது, ஏன் இப்படிப் பொய் சொல்கிறீர்கள்?' என்று இவர்களின் முகத்திரையைக் கிழித்தார்.
அதேபோல, மேட்டூர் அணையைத் திறப்பதற்கு நேரடியாகச் சென்று விளம்பரத்திற்காக லட்சக்கணக்கில் மக்களின் வரிப்பணத்தை செலவு செய்து போஸ் கொடுக்கத் தெரிந்த இவருக்கு, கர்நாடக முதல்வர் நமது தண்ணீரைத் தடுத்துப் பேசும் போது அதற்குத் தைரியமாக பதில் சொல்லத் தெரியவில்லை. தமிழ் தாய் வாழ்த்தை அவமதிக்கும் ஆளுநரை வேடிக்கை பார்க்கும் ஒரு முதுகெலும்பில்லாத அரசாக இது நீடிக்கிறது. இந்த இருண்ட ஆட்சி எப்போது முடிவுக்கு வரும் என்று ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் காத்துக் கொண்டிருக்கிறது" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)