நீர் நிலைகளில் மண் எடுக்க அரசு அனுமதி அளித்தும்... சிக்கல் : நடைமுறைகளை எதிர்கொள்வதில் விவசாயிகள் தவிப்பு

அருப்புக்கோட்டை:தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளில் உள்ள வண்டல் மண்ணை எடுக்க, தமிழக அரசு விவசாயிகளுக்கு அனுமதி அளித்துள்ள போதிலும், நடைமுறைகளை எதிர்கொள்வதில் சிக்கல்களால் விவசாயிகள் திணறி வருகின்றனர்.
தமிழக அரசு மாநிலத்தில் உள்ள சுமார் 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட நீர் நிலைகளில் விவசாயிகள் வண்டல் மண்ணை இலவசமாக எடுத்துக் கொள்ள அனுமதி அளித்துள்ளது. அரசு அறிவித்த நீர் நிலைகளில் மட்டுமே எடுக்க வேண்டும். கிராமங்களில் அதிகமாக உள்ள நீர் நிலைகள் அரசின் அதிகாரப்பூர்வ பட்டியலில் இல்லை.
இதனால், விவசாயிகள் இந்த திட்டத்தில் முழுமையான பயன்பெற முடியவில்லை. மேலும் விவசாயிகள் வண்டல் மண் அள்ள வருவாய் துறை, ஊராட்சி அலுவலர்களை சந்திக்க நடையாய் நடக்க வேண்டி உள்ளது. இலவசமாக மண் அள்ள அனுமதி தருவதில், அதிகாரிகளுக்கு மனம் இல்லை.
இலவச மண் அள்ள அரசு அனுமதித்தாலும், சாதாரண, ஏழை விவசாயிகளுக்கு ஏகப்பட்ட கெடுபிடிகள் விதிக்கப்படுகிறது. ஆனால் வசதி உள்ளவர்கள், மண் கடத்தல்காரர்கள் விவசாயிகள் போர்வையில் வண்டல் மண், சவடு மண்ணையும் அள்ளி செல்கின்றனர்.மழைக்காலம் துவங்குவதற்கு முன்பே மண் எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தாலும், நீர்வளத்துறை வருவாய்த்துறை ஆகிய துறைகள் மூலம் அனுமதி பெற பல நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.
கோடை காலத்திலேயே இந்த அனுமதியை கொடுத்தால் விவசாயிகளுக்கு பயனாக இருந்திருக்கும். அதிகாரிகளின் தாமதத்தால், மழை பெய்து நீர் நிலைகள் நிரம்பி விடுகின்றன.
இதனால் அரசு அறிவித்த திட்டமும் பயனற்று போகின்றன.
ஜவஹர், சமூக ஆர்வலர்: புதிய அரசு விவசாயிகளுக்கு அறிவித்த நல்ல திட்டங்களில் இது ஒன்று. அரசு பல்வேறு நல்ல திட்டங்களை அறிவித்தாலும் பல்வேறு நடைமுறை சிக்கல்களினால் மக்களுக்கு முழு மையாக சென்றடைவது இல்லை. திட்டங்களை மக்களுக்கு விரைவாகவும் முழுமையாகவும் சென்றடைய எளிமைப்படுத்த வேண்டும்.