பஸ் ஸ்டாண்ட்டுக்குள் மெகா பள்ளம் பெயர்ந்து விழுகிறது கான்கிரீட் பூச்சு

கோவை: காந்திபுரத்தில் உள் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் 1974 ல் கட்டப்பட்டது. திருப்பூர், கோபி, அந்தியூர், சத்தி, மேட்டுப்பாளையம், கரூர், ஈரோடு, சேலத்துக்கு தினமும் 998 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இப்போது மழை பெய்தால் தண்ணீர் செல்ல வழியில்லை. கழிவு நீர் செல்லவும் வழியில்லை; வடிகால் சுருங்கியுள்ளது. சில இடங்களில் வடிகாலில் கழிவு மண் படிந்திருக்கிறது. கழிப்பறை துர்நாற்றம் பயணிகளை பாடாய்படுத்துகிறது.
பஸ் ஸ்டாண்டை புதுப்பிக்க ரூ.30 கோடிக்கு திட்ட அறிக்கை தயாரித்து, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. உள்ளூர் திட்ட குழும நிதி ஒதுக்க மாநகராட்சி கோரியது. இதுவரை நிதி ஒதுக்கவில்லை.
பராமரிப்பும் படுமோசமாக உள்ளது. ஒன்று மற்றும் 2வது பிளாட்பாரத்துக்கு செல்லும் வழியில் மிகப்பெரிய பள்ளம் உருவாகியுள்ளது. பிளாட்பாரத்தின் மேற்கூரை ஒழுகுகிறது, ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது.
கடைசி ரேக்கில் உள்ள மாநகராட்சி வாகன நிறுத்துமிட மேல்தள கான்கிரீட் பூச்சு அவ்வப்போது பெயர்ந்து விழுகிறது. பயணிகள் தலை மீது எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடிய சூழல் உள்ளது. பாதுகாப்பை கருத்தில் கொண்டு அங்கு வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன் சோமனுார் பஸ் ஸ்டாண்ட்டில் மேற்கூரை இடிந்து விழுந்து 5 பயணிகள் உயிரிழந்தனர். அதுபோன்ற சம்பவம் காந்திபுரத்தில் நடக்காமல் இருக்க, உடனடியாக பராமரிப்பு அல்லது புதுப்பிக்கும் பணியை துவக்க வேண்டும்.