நெடுஞ்சாலை ஓரத்தில் பட்டு போன பனைமரங்களை அகற்ற வலியுறுத்தல்
சித்தாமூர்:கூழமங்கலம் நெடுஞ்சாலை ஓரத்தில், விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ள பட்டுப்போன பனைமரங்களை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
சித்தாமூர் பகுதியில் மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு இடையே செல்லும் 38 கி.மீ., நெடுஞ்சாலை உள்ளது.
இந்த சாலை வழியாக சூணாம்பேடு, நுகும்பல், சித்தாமூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மதுராந்தகம், செங்கல்பட்டு போன்ற பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். தினமும் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் இவ்வழியே கடந்து செல்கின்றன.
இந்நிலையில், கூழமங்கலம் நெடுஞ்சாலை ஓரத்தில் 20க்கும் மேற்பட்ட பனைமரங்கள் பட்டு போய் உள்ளன.
இதனால், பருவமழையின் போது பலத்த காற்று வீசினால், மரம் முறிந்து வாகன ஓட்டிகள் மீது விழுந்து விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது.
எனவே, விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ள பனைமரங்களை அகற்ற, நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.