Arts, culture, entertainment and media
ஸ்வீடனின் அலுவலக கலாசாரம் இப்படி தான்; இந்திய பெண் வெளியிட்ட வீடியோ வைரல்
-நமது நிருபர்- ஸ்வீடனில் வசிக்கும் ஒரு இந்தியப் பெண், மக்கள் எவ்வளவு சீக்கிரம் வேலைக்கு

ஸ்வீடனின் அலுவலக கலாசாரம் குறித்து இன்ஸ்டாகிராமில் ஸ்வாதி என்ற இந்தியப் பெண் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டார். வீடியோவில் அவர், ''காலை 7:45 மணிக்கு அலுவலகத்திற்குச் சென்றபோது, அங்குள்ள பார்க்கிங் ஏரியா ஏற்கனவே 70% நிறைந்து இருக்கும்; இந்தியாவில் பொதுவாக காலை 9:00 அல்லது 9:30 மணிக்குத்தான் ஊழியர்கள் அலுவலகம் வருவார்கள். ஆனால், ஸ்வீடனில் மக்கள் அதிகாலையிலேயே வேலைக்கு வந்து விடுகிறார்கள்'' என கூறியிருந்தார்.
அதற்கு முன்பு அவர் வெளியிட்ட மற்றொரு வீடியோவில், மாலை 4:30 மணிக்கே அலுவலகம் முற்றிலும் ஆள் நடமாட்டமின்றி காலியாக இருப்பதை காட்டியிருந்தார். தற்போது இந்திய பெண் வெளியிட்ட வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி, இந்திய மற்றும் ஐரோப்பிய கார்ப்பரேட் கலாசாரங்களுக்கு இடையேயான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்திய கார்ப்பரேட் ஊழியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்தியாவில் நீண்ட நேரம் வேலை செய்வதுதான் உழைப்பின் அடையாளமாகப் பார்க்கப்படும் நிலையில், ஸ்வீடனில் பின்பற்றப்படும் நடைமுறைகள்இந்தியாவிலும் கொண்டு வரப்பட வேண்டும் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அங்குள்ள ஊழியர்கள் தங்களது குழந்தைகளை காலை 7:00 மணிக்கு பள்ளியில் விட்டுவிட்டு நேரடியாக அலுவலகம் வந்துவிடுகின்றனர். சீக்கிரம் வேலைக்கு வந்தால், மாலையில் சீக்கிரமாகவே வீட்டிற்கு கிளம்பலாம் என்ற விதி அங்கு பின்பற்றப்படுகிறது.
ஸ்வீடனில் ஊழியர்கள் எவ்வளவு நேரம் அலுவலகத்தில் இருக்கையில் அமர்ந்து இருக்கிறார்கள் என்பதை விட, அவர்கள் செய்யும் வேலையின் தரத்திற்குத்தான் முக்கியத்துவம் தரப்படுகிறது; ஊழியர்கள் வார இறுதி நாட்களிலோ அல்லது மாலை 5 மணிக்கு மேலோ வேலை செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை என இணையத்தில் பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர்.