Weather
வடகிழக்கு பருவமழைக்கு முன் வீராங்கல் ஓடை துார்வாரப்படும்
சென்னை, செப். 12– வடகிழக்கு பருவமழை தொடங்கும்முன், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, வேளச்சேரி வீராங்கல்
வடகிழக்கு பருவமழை தொடங்கும்முன், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, வேளச்சேரி வீராங்கல் ஓடையில் துார்வாரும் பணிகளை முடிக்கப்படும் என, நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஆலந்துார், வேளச்சேரி பகுதிகளில் வீராங்கல் ஓடை செல்கிறது. இதில், ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதாக வெளியான செய்தியின் அடிப்படையில், தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.
இதில், நீர்வளத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை:
வீராங்கல் ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்த விபரங்கள், வருவாய்த் துறையிடம் கோரப்பட்டுள்ளது. வருவாய்த் துறை அளிக்கும் தகவல்கள் அடிப்படையில், ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
அதைத்தொடர்ந்து, ஓடையை துார்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும். வடகிழக்கு பருவமழை, அக்., இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அதற்கு முன் வீராங்கல் ஓடையில் துார்வாரும் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.